Published : 07 Aug 2015 10:16 AM
Last Updated : 07 Aug 2015 10:16 AM
பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக 70,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை சாதகமாக இருந்தாலும் இதனால் பெரிய மாற்றங்கள் ஏதும் நடக்கப்போவதில்லை என்று தரச்சான்று நிறுவனமான மூடி’ஸ் தெரிவித்திருக்கிறது.
அரசாங்கம் முதலீடு செய்ய போகும் தொகை பொதுத் துறை வங்கிகளின் தேவையை பூர்த்தி செய்யாது. அவர்களின் தேவைக்கு சந்தையை அணுக வேண்டி இருக்கும். சமீபகால சந்தையின் போக்கு காரணமாக பொதுத்துறை வங்கிகள் பங்குச்சந்தையில் தங்களுக்கு தேவையான நிதியை திரட்ட முடியவில்லை என்று மூடிஸ் தெரிவித்திருக்கிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் அதாவது 2018-19ம் நிதி ஆண்டில் 1.80 லட்சம் கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளுக்கு தேவைப்படுகிறது.
ஆனால் அரசாங்கம் 70,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக கூறியிருக் கிறது. மீதமுள்ள 1.10 லட்சம் கோடி ரூபாய் பங்குச்சந்தையில் இருந்து திரட்ட வேண்டி இருக்கும். தங்களுடைய நிதியை மேம்படுத்திக்கொள்ள பங்குச்சந்தையை நாட வேண்டி இருக்கும்.
அரசாங்கத்தின் திட்டத்தின் படி 2015-16 மற்றும் 2016-17ம் நிதி ஆண்டுகளில் தலா 25,000 கோடி ரூபாய், 2017-18-ம் மற்றும் 2018-19-ம் நிதி ஆண்டில் தலா 10,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக் கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு 50,000 கோடி முதலீடு கிடைப்பது சாதகம் என்று மூடிஸ் தெரிவித்திருக் கிறது.
முன்னதாக பட்ஜெட்டில் 7,900 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இப்போது இந்த தொகை 25,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த 25,000 கோடி ரூபாயில் 10,000 கோடி ரூபாய் நலிவடைந்த பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்படும்.
இந்தியா ரேட்டிங்க்ஸ் கருத்து
இந்திய வங்கித்துறை குறித்த ஆய்வுகளை இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் ஆராய்ச்சி செய்து சில முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
சுமார் 30 நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வைத்திருக்கின்றன. வங்கித் துறையில் இந்த கடன்களின் பங்கு மட்டும் சுமார் 7 முதல் 8 சதவீதமாக இருக்கிறது.
இதில் 50 சதவீதத்துக்கும் மேல் மின்சாரம் மற்றும் கட்டு மானத்துறையை சேர்ந்த நிறுவ னங்கள்தான். இரும்பு மற்றும் ஸ்டீல் துறையை சேர்ந்த நிறுவ னங்களின் பங்கு சுமார் 32 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. விமானப்போக்குவரத்து, கப்பல் கட்டுமானம், சர்க்கரை மற்றும் டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த நிறுவனங்களும் வாராக்கடன்கள் பட்டியலில் இருக்கின்றன.
தனியார் மற்றும் பெரிய பொதுத்துறை வங்கிகள் இந்த சிக்கலில் இருந்து எளிதாக தப்பித்து விடுகின்றன. ஆனால் நடுத்தர வங்கிகள் இந்த கடன் பிரச்சினையால் அவர்களின் நிகர வட்டி வரம்பு குறைகிறது என்று இந்தியா ரேட்டிங்க்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT