Published : 07 Nov 2019 10:43 AM
Last Updated : 07 Nov 2019 10:43 AM
புதுடெல்லி
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள், முன்னாள் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்நிறுவனம் வன்மையாக கண்டித்துள்ளது. நிறுவனவளர்ச்சிக்கு பாடுபட்டவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்பட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் இருவரும் நிறுவனத்தின் கணக்குகள் சார்ந்து பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக கடந்த மாதம் பெயரிடப்படாத கடிதம் வழியே குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குமதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல் நிறுவனத்துக்காக உழைத்தவர்கள் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நீலகேனி கூறிஉள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வலிமையானது. நிறுவனம் சார்ந்த எண்களை யாராலும் மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.
அந்த அநாமதேய புகார் குறித்து விசாரணை நடத்த சட்டநிறுவனம் ஒன்றை நியமித்து இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. விசாரணை குறித்த அறிக்கை நிறுவனத்தின் பங்குதாரர்கள் அனைவருக்கும் பகிரப்படும் என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT