Published : 05 Nov 2019 11:57 AM
Last Updated : 05 Nov 2019 11:57 AM

நாடு முழுவதும் பெரிய வெங்காயம் விலை மீண்டும் கடும் உயர்வு; காரணம் என்ன?

புதுடெல்லி

நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்தது. அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெங்காயப் பயிர்கள் அழிந்தன. அதன் விளைவாக கடந்த இரு மாதங்களாக பெரிய வெங்காயத்தின் அளவு குறைந்து அதன் விலை உயர்ந்தது.

மொத்த விலையில் அதிகபட்சமாக கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டது. சில்லறை காய்கறி விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கோடை காலத்தில் பயிரிடப்பட்ட வெங்காய இருப்பு இருந்ததால் அது சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தது. மொத்த விற்பனையில் கிலோ ரூ.20 ரூபாய் என்ற அளவுக்கு குறைந்தது.

இந்தநிலையில் மகாராஷ்டிராவில் தற்போது பருவம் தவறி மழை பெய்துள்ளது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.

பருவம் தவறி பெய்த இந்த மழையால் அறுவை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்து வருகிறது.

நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டெல்லி மட்டுமின்றி அலகபாத், ஜெய்ப்பூர் உட்பட பல நகரங்களிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

இதனையடுத்து வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளன.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x