Published : 04 Nov 2019 04:28 PM
Last Updated : 04 Nov 2019 04:28 PM
புதுடெல்லி
மோசடிக்கு ஆளான பிஎம்சி வங்கியில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் பணத்துக்கு என்ன பாதுகாப்பு என டெல்லி உயர் நீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரிய வந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வாடிக்கையாளர் 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.
இந்தநிலையில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மதிகாரி மற்றும் சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிஎம்சி வங்கியில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளை நீக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் பின்னர் கூறியதாவது:
வங்கியின் நிதிநிலைமை, சூழ்நிலை உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளாமல் இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் தனிப்பட்ட முறையில் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. வங்கிகளுக்கு தலைமை வங்கியாக இருக்கும் ரிசர்வ் வங்கி தான் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேசமயம் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தனது பதிலை வரும் 13-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர். பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 19-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT