Published : 02 Nov 2019 08:31 AM
Last Updated : 02 Nov 2019 08:31 AM

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடும் வீழ்ச்சி

புதுடெல்லி

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவின் முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. செப்டம்பர் மாதத்தில் அத்துறைகளின் உற்பத்தி -5.2% அளவில் சரிந்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உரங்கள், இரும்பு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை இந்தியாவின் மிக முக்கியமான 8 துறைகள் ஆகும். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இந்த 8 துறைகளின் உற்பத்தி மட்டுமே 40 சதவீதம் அளவில் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் இத்துறைகளின் உற்பத்தி அளவு -5.2 சதவீத அளவில் சரிந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அதன் வளர்ச்சி விகிதம் 4.3 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 12 மாதங்களாக இத்துறைகளின் உற்பத்தி சரிந்து வந்த நிலையில், முதன் முறையாக செப்டம்பர் மாதத்தில் அது எதிர்மறை குறியீட்டுக்கு (-) சென்றுள்ளது. நிலக்கரி உற்பத்தி சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு -20.5 சதவீதமாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் -4.2 சதவீதத்தில் இருந்து -5.4 சதவீதமாகவும், மின்சார உற்பத்தி 8.2 சதவீதத்தில் இருந்து -3.7 சதவீதமாகவும், சிமென்ட் 11.8 சதவீதத்தில் இருந்து -3.7 சதவீதமாகவும், இரும்பு உற்பத்தி 3.2 சதவீதத்தில் இருந்து -0.3 சதவீதமாகவும், சுத்திகரிப்பு தயாரிப்புகள் 2.5 சதவீதத்தில் இருந்து -6.7 சதவீதமாகவும், இயற்கை எரிவாயு -1.7 சதவீதத்தில் இருந்து -4.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது. எட்டு முக்கிய துறைகளில் உர உற்பத்தி துறை மட்டும் 5.4 சதவீத அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற ஆண்டு அதன் உற்பத்தி அளவு 2.5 சதவீதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த எட்டுதுறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி 1.3 சதவீதமாக உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும்தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடாக ரூ.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. நிதி ஆண்டின் முதல்பாதிலேயே அது ரூ.6.51 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை அளவை மொத்த ஜிடிபி-யில் 3.3 சதவீதமாக கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில் நிதிப் பற்றாக்குறை விகிதம் கணிசமான அளவில் உயரும் என்று தெரிகிறது. இதனால் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம்பாதி மத்திய அரசுக்கு மிக நெருக்கடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வரி வருவாய் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதல் காலாண்டில் அது 6 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்த அளவில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வரி வருவாய் 4.2 சதவீதமாக உள்ளது. இந்த நிதி ஆண்டில் ரூ.16.5 லட்சம்கோடியை வரி வருவாயாக ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. அந்த இலக்கைஅடைய வேண்டுமென்றால், இந்த நிதி ஆண்டின் இரண்டாம்பாதியில் வரி வருவாய் 42 சதவீத அளவில் இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x