Published : 26 Oct 2019 09:10 AM
Last Updated : 26 Oct 2019 09:10 AM

2020 மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்பட வாய்ப்பு: நுகர்வை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி

மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் பொருட்டு, தனி நபர் வருமான வரி வரம்பை மத்திய அரசு உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு வருமான வரிவரம்பு உயர்த்தப்படும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டு வரும் வரிவிலக்கு சலுகைகள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நிறுவனங்களுக்கான நிறுவன வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், ரூ.10 லட்சம் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர்கள் 30 சதவீதம் அளவில் வரி செலுத்தி வருகின்றனர். இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் இந்த வரி வரம்பு மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் ஆண்டு வருமானத்தில் வீட்டுக்கடன் போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய வருமானவரி வரம்பு கொண்டுவரப்படும்பட்சத்தில் அந்த வரி விலக்கு சலுகைகள் நீக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. அதனால், முதலீடுகள் பெருமளவில் குறைந்துள்ளன. மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டு இருப்பதால், உற்பத்தி குறைந்துள்ளது. இந்நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை சரி செய்யும் விதமாக, இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுகிறது. பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட உள்ள இந்த ஆட்சிக் காலத்தின் இரண்டாவது மத்திய பட்ஜெட்டில் இந்த வரி வரம்பு மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் இணைப்பு

கடந்த இரு மாதங்களில் மத்திய அரசு குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்தொடர்ச்சியாக தனி நபர் வருமான வரி வரம்பும் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், 10 பொதுத் துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து நிறுவனங்களுக்கான நிறுவன வரி 10 சதவீத அளவில் குறைக்கப்பட்டது. அதேபோல், அந்நிய நேரடி முதலீடுகள் மீதான வரம்புகள் தளர்த்தப்பட்டன. நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பாற்றாக்குறை வரம்பை 3.3 சதவீதத்துக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த நிதி ஆண்டில் மேலும் புதிய சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

தனி நபர் வருமான வரி தொடர்பாக மத்தியஅரசால் உருவாக்கப்பட்ட பணிக்குழு, கடந்த மாதம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம்வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத அளவிலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத அளவிலும் வரி விதிப்பு மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

2020 மத்திய பட்ஜெட்ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீத வரியும், ரூ.2 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 35 சதவீத வரியும் விதிக்க வேண்டும் என்று அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் இந்த பரிந்துரைகளின்படி 2020 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வருமானவரி வரம்புகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x