Published : 25 Oct 2019 01:07 PM
Last Updated : 25 Oct 2019 01:07 PM

ஜிஎஸ்டி மேலும் எளிமைப்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன் உறுதி

புதுடேல்லி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை மேலும் எளிமையாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதன் மூலம் எளிதாக தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் வரிசையில் இந்தியா மேலும் முன்னேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் இந்தியா 77-வது இடத்திலிருந்து 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 50 இடங்களுக்குள் முன்னேற இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொழில் தொடங்க ஏற்ற சூழலை மேலும் மேம்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக சொத்து பதிவு நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும். இந்தியாவில் கொண்டுவரப்பட்ட திவால் நடைமுறை சட்டம் சர்வதேச அளவில் இந்தியாவின் தர வரிசையை உயர்த்த உதவியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக வங்கியின் அடுத்த பட்டியலில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இடம்பெறும் என்றும் தற்போது டெல்லி மற்றும் மும்பை நகரங்கள் மட்டுமேகணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

வங்கிகள் மேற்கொண்டுள்ள அவுட்ரீச் திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பது எளிதாகியுள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x