Published : 17 Oct 2019 06:02 PM
Last Updated : 17 Oct 2019 06:02 PM

பிஎம்சி வங்கி மோசடி; சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி: அமலாக்கத்துறைக்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் கடிதம்

மும்பை

பிஎம்சி வங்கியில் வாங்கிய கடன் தொகைக்கு ஈடாக பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் சொத்துக்களை விற்று கடனை அடைக்க வேண்டும் என எச்டிஐஎல் புரமோட்டர்ஸ் நிறுவனம் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரிய வந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.

பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு இதுதொடர்பாக சோதனைகள் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் எச்டிஐஎல் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்கள் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அடுத்தடுத்து பறிமுதல் செய்து வருகிறது.

எங்களது சொத்துக்கள் அனைத்தையும் நியாயமான சந்தை விலைக்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை பிஎம்சி வங்கியில் வாங்கிய கடனுக்கு ஈடாக அடைக்க வேண்டும்.

பிஎம்சி வங்கியில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் நலன் கருதியே இதனை கூறுகிறோம். பறிமுதல் செய்த சொத்துக்களை விற்பனை செய்வதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. எனினும் இதனை உடனடியாக செய்து எங்கள் கடன் தொகைக்கு ஈடாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x