Published : 16 Oct 2019 08:24 AM
Last Updated : 16 Oct 2019 08:24 AM
கடும் கடன் சுமையில் இருக்கும் அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, அதன் எரிபொருள் பயன்பாட்டுக்கானத் தொகையை செலுத்துவதில் காலதாமதம் செய்து வருகிறது. இந்நிலையில் வரும் வெள்ளி முதல் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் வழங்கி வருகின்றன. மூன்று நிறுவனங்களுக்கும் மொத்தமாக ஏர் இந்தியா நிறுவனம் ரூ.5,000கோடியை கடனாக கொண்டுள்ளது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்ரேசனுக்கு மட்டுமே ரூ.2,700கோடி கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த கடன் தொகையைமொத்தமாக செலுத்தும் அளவுக்கு ஏர் இந்தியாவிடம் நிதி இல்லை. அதன் காரணமாக, தவணை முறையில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி அளவில் மூன்று நிறுவனங்களுக்கு வழங்கும் என்று ஏர் இந்தியா உறுதி அளித்து இருந்தது. ஆனால் அந்த உறுதிமொழியை ஏர் இந்தியா முறையாக பின்பற்றவில்லை. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் வழங்குவதை அந்த எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின.
அதன்பிறகு மத்திய அரசின்தலையீட்டால், கடந்த மாதம் மீண்டும் எரிபொருள் வழங்கப்படத் தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் அந்த உறுதிமொழியை ஏர் இந்தியா தவறி உள்ளது. இதன் காரணமாக வரும் வெள்ளி முதல் முக்கிய விமான நிலையங்களில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT