Published : 14 Oct 2019 08:31 PM
Last Updated : 14 Oct 2019 08:31 PM

பிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி

மும்பை

பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 77 சதவீதம் பேர் தங்களது கணக்கில் உள்ள மொத்த பணத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.

பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு இதுதொடர்பாக சோதனைகள் நடத்தி வருகிறது.

பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பி தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் திரும்பவும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் உடனடியாக பேசுவதாகவும், நடவடிக்கை எடுப்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் நிர்மலா சீதாராமன் வாடிக்கையாளர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

இந்தநிலையில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 77 சதவீதம் பேர் தங்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

முன்னதாக, தொடக்கத்தில் 1000 ரூபாய் மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. பின்னர் வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட தொகை அளவை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x