

ஹாங்காங்
ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் அண்மையில் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதால் சவுதியில் உள்ள அந்த ஆலையில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்தது. பல நாட்களாக கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டு நிலைமை சீரானது.
இந்தநிலையில், சவுதி அரேபியா அருகே செங்கடல் பகுதியில் சென்ற ஈரான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது அடுத்தடுத்து இரண்டுமுறை ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் புகார் தெரிவித்துள்ளது. ஆனால் சவுதி அரேபியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த தாக்குதல் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பெரிண்ட் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக 2.3 சதவீதம் உயர்ந்து 60.46 டாலர்களாக விற்பனையானது. வெஸ்ட் டெக்ஸாஸ் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை 2.1 சதவீதம் உயர்ந்து 54.69 டாலர்களா உயர்நதுள்ளது.
சீனா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை காரணமாக ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் ஈரான் கப்பல் மீது நடந்த தாக்குதல் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் அமைப்பான ஒபெக் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவுடன் ஈரானுக்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானால் கூடுதல் பாதிப்பு ஏற்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.