Published : 05 Oct 2019 11:24 AM
Last Updated : 05 Oct 2019 11:24 AM

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை: என்ன நிலவரம்?

சென்னை

சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.76.90-க்கும், டீசல் விலை 21 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.70.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

சவுதி அரேபியாவில் உள்ள அரோம்கோ நிறுவனத்தின் அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது செப். 14-ம் தேதியன்று ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டு, 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நிலைமை சீரடைந்து முழுமையாக கச்சா எண்ணெய் உற்பத்தி நடக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்தது. இனிவரும் காலங்களிலும் இந்த விலை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் ஏற்பட்ட விலை ஏற்றம் இந்திய சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த செப்.30 மட்டும் விலை சற்றே குறைந்த நிலையில், கடந்த 4 தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (அக். 5) 1 லிட்டர் பெட்ரோலின் விலை 31 காசுகள் குறைந்து 76.90 ரூபாயாக உள்ளது. அதேபோல டீசலின் விலையும் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் டீசலின் விலை 21 காசுகள் குறைந்து, ரூ.70.94-க்கு விற்பனை ஆகிறது.

இந்தியப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்த நிலையில், அதை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரிக்குறைப்பு, அந்நிய முதலீட்டு விதிகளில் தளர்வு உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x