மீண்டும் தங்கம் விலை உயர்வு

மீண்டும் தங்கம் விலை உயர்வு
Updated on
1 min read

சென்னை

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.152 அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.28,944 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்க விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது. பொருளாதார மந்தநிலை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர்.

இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கிடையே கடந்த செப்.4-ம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது.

இரு வாரங்கள் முன்பு வரை, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 152 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதாவது கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய் அதிகரித்து 3,618 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல 8 கிராம் சுத்தத் தங்கம் ரூ.30 ஆயிரத்துக்கு 200-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை குறைந்தது
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. வெள்ளியின் மதிப்பு இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.48.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, ரூ.48,800-க்கு விற்பனையாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in