தனிநபர் வருமான வரி வரம்பு உரிய நேரத்தில் மாற்றி அமைக்கப்படும்: நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் தகவல்

தனிநபர் வருமான வரி வரம்பு உரிய நேரத்தில் மாற்றி அமைக்கப்படும்: நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் தகவல்
Updated on
2 min read

புதுடெல்லி

தனி நபர் வருமான வரி வரம்பில் உரிய நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நிறுவனங்களுக்கான நிறுவன வரியை மத்திய அரசு 10 சதவீதம் அளவில் குறைத்தது. அதைத் தொடர்ந்து தனிநபர் வருமான வரி விகிதத்திலும் மாற்றம் கொண்டு வருவதற்கான பரிசீலனை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் உரிய நேரத்தில் தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களுக்கான நிறுவன வரி 30 சதவீதமாக இருந்தது. தற்போது இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் அவற்றை எதிர்கொள்ளும் பொருட்டு அந்த வரி விகிதத்தை 22 சதவீதமாக குறைத்து புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. முந்தைய 30 சதவீத வரி விகிதமானது பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம். எனவே அந்நாடுகளுக்கு போட்டியாக முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதற்காகவும் இந்த வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிறுவன வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், முதலீடுகளை பெருக்குவதும், வேலை வாய்ப்பை உருவாக்குவதுமே தற்போதைய சவாலாக மாறியுள்ளன. இருந்தும் நிர்ணயிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவோம் என்று அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

இந்நிலையில் நிறுவனங்களுக்கான வரியை குறைப்பதனால் முதலீடுகள் பெருகலாமே தவிர, நுகர்வு அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் கொண்டுவருவதற்கான பரிசீலனை முன்வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத அளவிலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர் களுக்கு 20 சதவீத அளவிலும் வரி விதிப்பு மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கேட்கப் பட்டபோது, உரிய நேரத்தில் மத்திய அரசு வருமான வரி வரம்பில் மாற்றம் கொண்டு வரும் என்று அவர் கூறினார்.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் குறித்து மேலும் அவர் கூறியதாவது, ‘நிறுவனங்களுக்கான நிறுவன வரி குறைக்கப்பட்டு இருப்பதால் முதலீடுகள் பெருகத் தொடங்கும். புதிய முதலீடுகள் மூலம் பல வேலைவாய்ப்புகள் உருவாகும். கடந்த இரு மாதங்களில் மட்டுமே மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 10 பொதுத் துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றியது. ரிசர்வ் வங்கியும் ரெப்போ விகிதம் குறைப்பு போன்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளின் பலன் மக்களை சென்றடைய வேண்டும் என்று வங்கிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறோம். தற்போதைய நிலையில் கடத்தல் முக்கிய ஆபத்தாக உள்ளது. அவற் றால் பல வேலை வாய்ப்புகள் தடைபடு கின்றன. கடத்தலுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. கடத்தலை தடுப்பதன் மூலம் சுமார் 16 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஜவுளி, புகையிலைத் தயாரிப்பு, மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பு உருவாகும்’ என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in