

புதுடெல்லி
அரசு வங்கிகளின் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் செய்ய இருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளன.
நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக அளித்த வாக்குறுதியை அடுத்து இந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்கும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த வங்கி இணைப்பு நடவடிக்கை நிறைவு பெற்றவுடன் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறையும். 2017-ல் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ஆக இருந்தது.
10 அரசு வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் வரும் 26 மற்றும் 27-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக ஏ.ஐ.பி.ஓ.சி., ஏ.ஐ.பி.ஓ.ஏ., ஐ.என்.பி.ஓ.சி. மற்றும் என்.ஓ.பி.ஓ. ஆகிய 4 வங்கி அதிகாரிகள் சங்கங்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில் வங்கி அதிகாரிகள் சங்கங்களுடன் மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "அனைத்து வங்கிகளின் அடையாளத்தைப் பாதுகாப்பது உள்பட 10 வங்கிகளை இணைப்பால் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு குழு அமைப்பதில் நிதியமைச்சக செயலாளர் ராஜீவ் குமார் சாதகமான பதில் அளித்துள்ளார். வேலைநிறுத்த அழைப்பை மறுபரிசீலனை செய்ய எங்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிதிச் செயலாளரின் சாதகமான பேச்சைக் கருத்தில் கொண்டு 48 மணி நேர வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். வங்கிப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பிடிஐ