Published : 23 Sep 2019 11:33 AM
Last Updated : 23 Sep 2019 11:33 AM

ஒரு வாரமாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை: சிரமத்தில் வாகன ஓட்டிகள்

பிரதிநிதித்துவப்படம்

சென்னை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சவுதி அரேபியாவில் உள்ள அரோம்கோ நிறுவனத்தின் அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது செப். 14-ம் தேதியன்று ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டு, 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நிலைமை சீரடைந்து முழுமையாக கச்சா எண்ணெய் உற்பத்தி நடக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்தது. இனிவரும் காலங்களிலும் இந்த விலை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் ஏற்பட்ட விலை ஏற்றம் இந்தியச் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 31 காசுகள் உயர்ந்து, ரூ.76.83-க்கு விற்கப்படுகிறது. அதேபோல டீசலின் விலையும் அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டர் டீசலின் விலை 20 காசுகள் அதிகரித்து, ரூ.70.76-க்கு விற்பனை ஆகிறது. ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஒரே வாரத்தில் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 98 காசுகளும் டீசலின் விலை 1 ரூபாய் 61 காசுகளும் உயர்ந்துள்ளன.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களின் விற்பனை விலையை உயர்த்தியதே விலை உயர்வுக்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்ததும் பெட்ரோலின் விலை ஏறுமுகத்தில் இருக்கக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x