Published : 20 Sep 2019 04:38 PM
Last Updated : 20 Sep 2019 04:38 PM

நிதியமைச்சரின் வரிச்சலுகையால் உற்சாகம்: ஒரேநாளில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.2 லட்சம் கோடி உயர்வு: சென்செக்ஸ் 1921 புள்ளிகள் அதிகரிப்பு

கோப்புப்படம்

மும்பை

பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பல்வேறு வரிச்சலுகை அறிவிப்பால் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1,921 புள்ளிகள் உயர்வுடன் இன்றைய வர்த்தகம் முடிந்தது.

இந்த உயர்வு 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஏற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்த உயர்வால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ஒரேநாளில் ரூ.2.11லட்சம் கோடி உயர்ந்து ஏறக்குறைய ரூ 7லட்சம் கோடியாக அதிகரித்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது, ஆட்டமொபைல் துறையில் விற்பனைக் குறைவு, முக்கிய துறைகள் உற்பத்தி சரிவு போன்றவற்றால் பொருளாதாரம் சுணக்க நிலையில் இருந்தது. பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிடும் நோக்கில் கடந்த வாரங்களில் 3 முறை முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்நிலையில் 4-வது கட்ட அறிவிப்புகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக பல்வேறு வரிச்சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்தார். கார்ப்பரேட் வரி குறைப்பு, புதிய நிறுவனங்களுக்குக வரிக் குறைப்பு, உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை போன்ற பல்வேறு சலுகைகளை நிர்மலா அறிவித்தார்.

இந்த அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சில நிமிடங்களில் பங்குச்சந்தையில் நல்ல மாற்றம் தென்பட்டு, பங்குகள் விலை உயரத் தொடங்கியது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடியில் இருந்து, ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரித்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 1300 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதிகபட்சமாக வர்த்தகப் புள்ளிகள் வர்த்தகத்தின் இடையே 38,378 வரை சென்றது. இந்த உயர்வு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருந்தது.

வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 1,921.15 புள்ளிகள் உயர்ந்து, 38,014 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 2,122 புள்ளிகள் வரை உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் 569.40 புள்ளிகள் உயர்ந்து 11,274.20 புள்ளிகளில் முடிந்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஹீரோ மோட்டார், இன்டஸ் இந்தியா வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, மாருதி சுஸூகி, எய்ச்சர் மோட்டார்ஸ், பாரத்பெட்ரோலியம், ஹெச்யுஎல், லார்சன் அன்ட் டூப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகமான லாபத்தை ஈட்டின.

அதேசமயம், பவர்கிரிட், இன்போசிஸ், டிசிஎஸ், என்டிபிசி, டெக் மகி்ந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிந்தன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x