Published : 17 Sep 2019 03:02 PM
Last Updated : 17 Sep 2019 03:02 PM

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு: கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி

மும்பை
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன.

சவுதி அரேபியாவில் உள்ள அரோம்கோ நிறுவனத்தின் அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டு, 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்து முழுமையாக கச்சா எண்ணெய் உற்பத்தி நடக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது.

இதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் இன்று எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 700 புள்களிகள் வரை சரிந்தது. 36,480 புள்ளிகளாக வர்கத்தகமாகி வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் நிப்டி 160 புள்ளிகள் வரை சரிவு கண்டு 10,830 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக வங்கித்துறை பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎப்டிசி வங்கி உள்ளிட்ட வங்கித்துறை பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x