Published : 17 Sep 2019 10:28 AM
Last Updated : 17 Sep 2019 10:28 AM

கச்சா எண்ணெய் விலை எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை அதிகரிக்க வாய்ப்பு

மும்பை,

சவுதி அரேபியாவில் உள்ள அரோம்கோ கச்சா எண்ணெய் ஆலையில் நடத்தபட்ட தாக்குதலைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக அடுத்துவரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை உயரக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

சவுதி அரேபியாவில் உள்ள அரோம்கோ நிறுவனத்தின் அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டு, 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்து முழுமையாக கச்சா எண்ணெய் உற்பத்தி நடக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவின் நியூயார்க் பரிமாற்றச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 5.61 டாலர் அளவுக்கு உயர்ந்து, 60.46 டாலராக அதிகரித்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் 11.77 சதவீதம் விலை உயர்ந்து 67.31 டாலராக அதிகரித்தது. இனிவரும் காலங்களிலும் இந்தவிலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் அடுத்த 2 வாரங்களில் தங்களின் விலையை உயர்த்தும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

இதுகுறித்து கோடாக் செக்யூரிட்டிஸ் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவிக்கையில், " சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 10 டாலர் அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் விலை உயர்வில் மாற்றம் இருக்காது என்று சொல்ல முடியாது. வரும் நாட்களில் உள்நாட்டில் சில்லரை விலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் 6 வரை உயரக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து எண்ணெய் வள ஆய்வாளர் அமித் பண்டாரி கூறுகையில், " சவுதி அரேபியா அரோம்கோ ஆலையில்நடத்தப்பட்ட தாக்குதலால் குறைந்த கச்சா எண்ணெய் உற்பத்தியின் தாக்கம் இந்தியாவில் எதிரொலிக்கும். இந்தியாவுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய் பேரலில் 7 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்த்தால் கச்சா எண்ணெய் விலை பேரல் 75 டாலர்களுக்கு உயர்ந்தால், விலையை கட்டுப்படுத்தும் விஷயங்கள் குறித்து அரசு பரிசீலிக்கலாம்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x