Published : 17 Sep 2019 09:17 AM
Last Updated : 17 Sep 2019 09:17 AM

பணவீக்க விகிதத்தில் மாற்றம் இல்லை

புதுடெல்லி

ஒட்டுமொத்த விலை அடிப்படையிலான (டபிள்யூபிஐ) பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 1.08 சதவீதமாக உள்ளது. இதனால் அக்டோபர் மாதத்தில் ரிசர்வ் வங்கி மேலும் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிகிறது.

பொதுவாக ரிசர்வ் வங்கி நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அடிப்படையில் தனது நிதிக் கொள்கையை வகுக்கும். இருந்தாலும் பிரதான தொழில்களின் பணவீக்கம் சரிந்துள்ள நிலையில் வட்டிக்
குறைப்புக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் உற்பத்திதுறை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்திலும் ஒட்டு மொத்த விலைக் குறியீட்டெண் 1.08 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இது 4.62 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருட்களின் விலை கடந்த மாதத்தில் 7.67 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூலையில் 6.15 சதவீதம் மட்டுமே உயர்ந்து காணப்பட்டது. பணவீக்க உயர்வுக்கு காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த பொருட்களின் விலை உயர்வு காரணமாகக் கூறப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை 13.07 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் விலை 10.67 சதவீதம் மட்டுமே உயர்ந்து காணப்பட்டது. புரதச்சத்து உணவுகளான முட்டை, மாமிசம், மீன் உள்ளிட்டவற்றின் விலை 6.60 சதவீதம் உயர்ந்திருந்தது. இது கடந்த ஜூலை மாதத்தில் 3.16 சதவீதமாக இருந்தது. எண்ணெய், எரிசக்தி ஆகியவற்றின் பணவீக்கம் 4 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த ஜூலையில் 3.64 சதவீதமாக இருந்தது.

உற்பத்தித்துறை பணவீக்கம் பூஜ்யமாக இருந்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த விலை அடிப்படையிலான பண வீக்கத்திலும் மாற்றம் இல்லாத நிலையில் வட்டி குறைப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x