Published : 22 Jul 2015 09:47 AM
Last Updated : 22 Jul 2015 09:47 AM
கடந்த நிதி ஆண்டின் முடிவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2.67 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் மாத முடிவில் வாராக்கடன் 2.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவையில் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 5.43 சதவீதமாக (2015 மார்ச் நிதி ஆண்டு முடிவில்) இருக்கிறது. கடந்த 2014 மார்ச் வரை மொத்த வாராக்கடன் 4.72 சதவீதமாக இருந்தது.
மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் பிரச்சினையில் கவனம் செலுத்தி வருகின்றன. வாராக்கடன் அதிகரிப்பால் வங்கி களின் லாபம் குறைவதுடன், மூல தன தன்னிறைவு விகிதத்தையும் பாதிக்கிறது என்றார்.
கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் ரூ.41,236 அளவுக்கு வாராக்கடனை மீட்டிருக்கிறது. கடந்த 2013-14ம் ஆண்டில் 33,698 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனை வசூல் செய்தன என்றும் அவர் கூறினார்.
நிகரலாபம்
கடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் நிகரலாபத்தை விட தனியார் வங்கிகளின் நிகர லாபம் ரூ. 1,153 கோடி அதிகமாக இருக்கிறது. தனியார் வங்கிகளின் நிகர லாபம் ரூ.38,976 கோடியாகும். ஆனால் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.37,823 கோடி என்று ஜெயந்த் சின்ஹா கூறினார்.
27 பொதுத்துறை வங்கிகள் 70 சதவீத சந்தையை வைத் திருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT