Published : 14 Sep 2019 03:48 PM
Last Updated : 14 Sep 2019 03:48 PM

ஏற்றுமதி, வீடு வசதி திட்டங்களுக்கு சலுகைகள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி

பொருளாதார சுணக்கத்தை தீர்க்கும் வகையில் ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு பல்வேறு சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. முதல் காலாண்டில் உற்பத்தித் துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

மேலும், ஆட்டோமொபைல் துறையின் ஆகஸ்ட் மாத விற்பனையில் அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம் தனது கார் தயாரிப்பை இரு நாட்கள் நிறுத்தியுள்ளது. அதேபோல அசோக் லேலண்டன் நிறுவனமும் தனது தொழிற்சாலை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பொருளாதார சிக்கலில் இருந்து நாடு மீண்டெழுந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வங்கிகள் கடன் வழங்குவத்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கி அறிவித்தபடி வட்டி குறைப்பு நடவடிக்கைகைளை மற்ற வர்த்தக வங்கிகளும் மேற்கொண்டு வருகின்றன. பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை 19-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பணவீக்கம் மிகவும் குறைவாக 4 சதவீதத்துக்குள் கீழே கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் பெருமளவு பயன்பெறும்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க ஆறு அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஜவுளி உட்பட ஏற்றுமதி பொருட்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதி கடன் உறுதி கழகம் விரிவுபடுத்தப்படும். ஏற்றுமதி பொருட்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்கப்படும். வர்த்தக கடன்களை போலவே வீட்டுக்கடனுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்படும். நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடு கட்டும் திட்டத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x