Published : 14 Sep 2019 09:07 AM
Last Updated : 14 Sep 2019 09:07 AM

ஆட்டோ மொபைல் விற்பனை சரிவுக்கு வாகனத் துறையினரின் தவறான திட்டமிடலே காரணம்: இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் கருத்து

சென்னை

வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடி நிலைக்கு, அத்துறையினரின் தவறான திட்டமிடலே காரணம் என்று இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என். ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

வாகனத் துறையினர் தங்கள்மேல் தவறுகளை வைத்துக்கொண்டு, அரசிடம் வரி குறைப்பு கோருகின்றனர். ஜிஎஸ்டியை குறைப்பதனால் மட்டும் வாகன விற்பனை உயர்ந்து விடாது. சூழலை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது வாகனங்களின் விற்பனை மிக மோசமான அளவில் சரிந்துள்ளது. இதன் விளைவாக பல வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. இந்நிலையில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி, வாகனத் தயாரிப்பு தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக வாகன விற்பனை குறைந்துள்ளதாகவும், அதை சரி செய்வதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று வாகன துறையினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், வாகன விற்பனை சரிவுக்கு வாகனத் துறையினரே காரணம். அவர்களின் தவறான திட்டமிடலால்தான் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன்பொருட்டு அரசு ஜிஎஸ்டி குறைப்பை மேற்கொள்ளத் தேவையில்லை என்று என். னிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 20 அன்று ஜிஎஸ்டி கவுன்ஸில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘‘வரி குறைப்பு வாகன விற்பனையை அதிகரிக்காது. இது வாகனத் துறையின் அமைப்பு ரீதியான பிரச்சினை. இவ்வாறு நெருக்கடி நிலை வருவதை உணர்ந்தும் அதிக அளவில் வாகனங்களை தயாரித்துள்ளனர். அது அவர்களின் தவறு. இதற்காக அரசை வரி குறைக்கச் சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. சிமென்ட் நிறுவனங்களும் நெருக்
கடியில்தான் இயங்கிவருகின்றன. எங்களுக்கும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதே 28 சதவீத வரிதான் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் நாட்டின் சூழலை உணர்ந்து அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றோம்’’ என்று அவர் தெரிவித்தார்.

சில தினங்களுக்குமுன் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ், வாகனத் துறையின் தற்போதைய சரிவுக்கு அதன் அதிக உற்பத்திதான் காரணம். ஜிஎஸ்டி குறைப்பால் இந்த நெருக்கடி நிலையை சரி செய்ய முடியாது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x