Published : 03 Sep 2019 02:04 PM
Last Updated : 03 Sep 2019 02:04 PM

அசோக் லேலண்ட் விற்பனை: ஆகஸ்ட் மாதத்தில் 47% சரிவு

புதுடெல்லி

லாரி மற்றும் பேருந்து தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 47 சதவீதம் சரிவடைந்துள்ளது.
உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.
இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த பொருளாதார சுணக்கத்தால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 17,386 லாரி மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. அதேசமயம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9231 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
சிறு, நடுத்தர மற்றும் ஹெவி சரக்கு வாகனங்களின் விற்பனையை பொறுத்தவரையில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 15,945 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 7432 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்த வாகனங்கள் விற்பனை 47 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இவ்வாறு அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x