Published : 30 Aug 2019 05:13 PM
Last Updated : 30 Aug 2019 05:13 PM

இனி 27 அல்ல 12 தான்: பொதுத்துறை வங்கிகள் இணைப்பு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி

நாடுமுழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். இதுமட்டுமின்றி பொதுத்துறை வங்கிகளுக்காக பல்வேறு சீர்திருத்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.

இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொருளாதார சுணக்கத்தை போக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சில தினங்களுக்கு முன்பு பொருளாதார ஊக்கத்திற்காக சில அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அதிசெல்வந்தர்களுக்கான சூப்பர் ரிச் வரி விலக்கப்படும், தொழில் முனைவோருக்கான ஏஞ்செல் வரியும் விலக்கப்படும், பொதுத்துறை வங்கிகள் மூலம் கூடுதல் கடன் வழங்கப்படும், சிஎஸ்ஆர் விதிமீறல்கள் குற்றம் என்பது நீக்கப்படும், நடுத்தர தொழில் நிறுவனங்கள் செலுத்தி ஜிஎஸ்டி வரி தொகை 30 திருப்பி வழங்கப்படும், வாகனப்பதிவுக் கட்டணம் உயர்வு ஜூன் 2020 வரை தள்ளி வைக்கப்படும் என தெரிவித்தார்.

வங்கிகள் இணைப்பு

இதைத்தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* இந்த நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன.
* பாங்க் ஆப் பரோடா, விஜயா பாங்க், தேனா பாங்க் ஆகியவை இணைக்கப்படும்.
* பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படும்.
* கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் இணைக்கப்படும்.
* யூனியன் வங்கி, கார்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை இணைக்கப்படும்.

* இந்தியன் வங்கியும், அலகாபாத் வங்கியும் இணைக்கப்படும்.

* சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா ஆகியவை தனி வங்கிகளாக செயல்படும்

* இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ பாங்க், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் பாங் ஆகியவை அந்தந்த பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x