Published : 29 Aug 2019 09:29 AM
Last Updated : 29 Aug 2019 09:29 AM
மும்பை
ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கென்று நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கும் ரோபோக்களை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்திய அளவில் வங்கி செயல்பாட்டுக்காக ரோபோவை பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
முதற்கட்டமாக 14 ரோபோக்கள் 12 இந்திய நகரங்களில் உள்ளஐசிஐசிஐ வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மும்பை, புதுடெல்லி, பெங்களூரு,மங்களூரு, ஜெய்பூர், ஹைதராபாத், சண்டிகார், போபால், ராய்ப்பூர், சங்லி, சிலிகுரி, வாராணசி ஆகிய 12 நகரங்களில் பணம் எண்ணும் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த ரோபோக்கள் 70 விதமான கணக்கீடுகளை ஒரே விநாடியில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவை. ரூபாய் நோட்டுகளை அதன் மதிப்பு வாரியாகவும், தரம் வாரியா கவும் தனித் தனியாக பிரிக்கும் செயல்பாடுகளை இந்த ரோபோக்கள் செய்யும்.
14 ரோபோக்கள்
‘ரூபாய் நோட்டுக்களை மிகத்துல்லியமாகவும், விரைவாகவும் எண்ணுவதற்காக இந்த ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 180 கோடி ரூபாய் நோட்டுகளை இந்த 14 ரோபோக்கள் எண்ணும். இந்தியாவில் ஐசிஐசிஐ வங்கி முதல்முறையாக இந்தப் புதிய தொழில் நுட்பத்தை தொடங்கி வைத்துள்ளது. இதனால் ரூபாய் நோட்டுகளை வகைப்படுத்தும் செயல்பாடுகளை குறைந்த கால அளவிலேயே செய்து முடிக்க முடியும்’ என்று ஐசிஐசிஐ வங்கியின் செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவையின் தலைவர் அனுபுதி சங்காய் தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி இதுபோலான மேலும் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT