Published : 28 Aug 2019 11:34 AM
Last Updated : 28 Aug 2019 11:34 AM

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதி; பொருளாதாரம் பாதிக்கப்படும் என அபிரூப் சர்க்கார் எச்சரிக்கை

கொல்கத்தா

ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி எடுத்திருக்கும் முடிவு நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட காலம் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர் அபிரூப் சர்க்கார் கூறியுள்ளார்.

நாட்டின் நிதி நிலையை ஸ்திர நிலையில் வைத்திருக்க மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை வலுப்படுத்தி வந்துள்ளது. ஆனால், தேவையான அளவை விட அதிகமான உபரி நிதி ரிசர்வ் வங்கி வசம் இருப்பதாகவும், அந்த நிதியை அரசுக்கு வழங்கினால் பயனுள்ள வகையில் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் எனவும் கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் உபரி நிதி குறித்த விவாதம், நாளடைவில் ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே மோதலாக மாறியது. இந்த மோதல் பின்னணியில் உர்ஜித் படேல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளானார்.

இதையடுத்து ரிசர்வ் வங்கி உபரி நிதியை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் தனது அறிக்கையைச் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வாரியக் குழுவிடம் சமர்ப்பித்தது.

இது தொடர்பான விவாதத்தில் ரிசர்வ் வங்கி வாரியக்குழு ஈடுபட்டது. பிமல் ஜலான் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கொடுத்துள்ள பரிந்துரைகளின்படி மத்திய அரசுக்கு முதல்கட்ட உபரி நிதியை இந்த நிதி ஆண்டில் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ரூ.1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் திருத்தப்பட்ட பொருளாதார மூலதன செயல்வரைவின்படி 2018-19 நிதி ஆண்டுக்கான உபரி நிதியாக ரூ.1,23,414 கோடி யும், ரூ.52,637 கோடி கூடுதல் ஒதுக்கீடாகவும் வழங்கப்படு வதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர் அபிரூப் சர்க்கார் கூறியிருப்பதாவது:

‘‘ஆட்சியில் இருக்கும் 5 ஆண்டுகளுக்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்பதே எந்த ஒரு அரசின் நோக்கமாக இருக்கும். ஆனால் ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளுக்கு நீண்டகால பார்வை இருக்க வேண்டும். அவற்றின் சுய அதிகாரத்தை பறிப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

ரிசர்வ் வங்கி தனது உள் மற்றும் வெளி தேவைகளை உறுதிப்படுத்தவும், ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது அவற்றை சரிசெய்யவும் அதற்கு ஒரு பெரிய தொகை தேவைப்படும். எனவே ரிசர்வ் வங்கியின் வசம் கூடுதலான தொகை இருப்பதில் தவறில்லை. ஆனால் தற்போது அந்த தொகை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும்”

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x