Published : 27 Aug 2019 12:45 PM
Last Updated : 27 Aug 2019 12:45 PM

மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி நிதி வழங்கும் ரிசர்வ் வங்கி: சில முக்கிய தகவல்கள்

புதுடெல்லி

ரிசர்வ் வங்கி கையிருப்பிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி வாரியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றிய சில முக்கிய தகவல்களை பார்க்கலாம்

* நாட்டின் நிதி நிலையை ஸ்திர நிலையில் வைத்திருக்க மத்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை வலுப்படுத்தி வரும். ஆனால், தேவையான அளவை விட அதிகமான உபரி நிதி ரிசர்வ் வங்கி வசம் இருக்கிறது.
* கூடுதல் நிதியை அரசுக்கு வழங்கினால் அதனை பயனுள்ள திட்டங்களுக்கு செயல்படுத்த முடியும் என்பதால் அந்த நிதி மத்திய அரசால்கோரப்பட்டது.

* ஆனால் ரிசர்வ் வங்கியின் பணத்தை மத்திய அரசு வாங்குவது அதனை நிதியாதாரத்தையும், செயல்பாட்டையும் முடக்கிவிடும் என்ற அச்சம் சில பொருளாதார நிபுணர்களிடம் காணப்படுகிறது.

* இந்த மோதலால் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார்.

* இந்த சர்ச்சையை தொடர்ந்து ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் தனது அறிக்கையைச் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வாரியக் குழுவிடம் சமர்ப்பித்தது.
* இந்த பரிந்துரையின்பேரில் ரிசர்வ் வங்கியின் பணம் மத்திய அரசிடம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கையிருப்பு பணம் ரூ.1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

* திருத்தப்பட்ட பொருளாதார மூலதன செயல்வரைவின்படி 2018-19 நிதி ஆண்டுக்கான உபரி நிதியாக ரூ.1,23,414 கோடி யும், ரூ.52,637 கோடி கூடுதல் ஒதுக்கீடாகவும் வழங்கப்படுகிறது.

* ரிசர்வ் வங்கி தனது ட்விடண்ட் தொகையில் 28 ஆயிரம் கோடி ரூபாயை கடந்த பிப்ரவரி மாதமே மத்திய அரசுக்கு வழங்கி விட்டது.
* மத்திய அரசின் பொருளாதார சுழற்சி நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படும் என நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
* பொருளாதார சூழல் மந்தமாக உள்ள நிலையில் சந்தையின் செயல்பாடுகளை ஊக்குவிக்க பல்வேறு துறைகளிலும் அரசே நேரடியாக முதலீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் பணம் இதற்கு பயன்படுத்தப்படலாம்.

* பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி ரூபாய் மறுமூலதனம் செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. ரிசர்வ் வங்கி வழங்கும் இந்த உபரி நிதி வங்கிகளின் மறுமூலதனத்துக்கும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

* பொருளாதார சுணக்கத்தை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x