Published : 24 Aug 2019 10:45 AM
Last Updated : 24 Aug 2019 10:45 AM

ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை: ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முடிவு?

புதுடெல்லி

ஏர் இந்தியா நிறுவனம் கடும் நிதிநெருக்கடியால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

4,500 கோடி ரூபாய் பாக்கிக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
நாட்டின் பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்திய கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

பல ஆயிரம் கோடி ரூபாய் கடனால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்த நிறுவத்திற்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. இருப்பினும் விமான எரிபொருள் வாங்கியதற்கான தொகையை கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது.

கடந்த 200 நாட்களாக எரிபொருள் அந்நிறுவனம் செலுத்தவில்லை. மொத்தம் 4,500 கோடி ரூபாய் தொகையை செலுத்தவில்லை. அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் வழங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா இதுவரை வழங்கவில்லை.

வழக்கமாக எண்ணெய் நிறுவனங்கள் 90 நாட்கள் வரை தான் கடன் வழங்குவது வழக்கம். ஆனால் 200 நாட்கள் தாண்டியும் ஏர் இந்தியா இதனை திருப்பிச் செலுத்தவில்லை.

இதையடுத்து ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் வரையில் மட்டுமே சம்பளம் வழங்கும் சூழல் உள்ளது. அதற்கு பிறகு சம்பளம் வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத சூழல் உள்ளது.

ஏர் இந்தியாவுக்கு தற்போது 55 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் மேலும் 4 ஆயிரம் கோடி கடன் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஊழிர்களுக்கு சம்பளம் வழங்க 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் அவ்வளவு தொகை தற்போது இல்லை.
இதனால் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்து விட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக அடுத்த வாரம் மத்திய அமைச்சரகள் குழுக் கூட்டம் கூடி முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x