Published : 19 Aug 2019 08:54 PM
Last Updated : 19 Aug 2019 08:54 PM

கார்ப்பரேட் வரி படிப்படியாகக் குறைக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, பிடிஐ

ரூ.400 கோடிக்கும் மேல் ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி படிப்படியாகக் குறைக்கப்பட்டு 25% ஆக மாற்றப்படும், நாட்டின் செல்வங்களை உருவாக்குபவர்களை அரசு எப்போதும் ஆதரிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தொழிற்துறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்தார்.

தனது முதல் பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் ரூ.400 கோடி வரை வருவாய் உள்ள நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 30%லிருந்து 25% ஆகக் குறைத்தார்.

இந்நிலையில் ரூ.400 கோடிக்கு மேல் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைப்போம் என்ற நிர்மலா சீதாராமன் அதற்கான காலக்கெடு எதையும் குறிப்பிடவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையையடுத்து நிர்மலா சீதாராமனும் நாட்டின் செல்வத்தைப் பெருக்கும் தொழில்முனைவோருக்கு அரசு அனைத்து விதமான ஆதரவுகளையும் அளிக்கும் என்றார்.

பிரதமர் மோடி ஆகஸ்ட் 15ம் தேதியன்று பேசும்போது, “செல்வம் உருவாக்குபவர்களை நாம் ஒரு போதும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டாம். செல்வம் உருவாக்கப்பட்டால்தான் விநியோகம் செய்யப்பட முடியும். செல்வ உருவாக்கம் முழுமுற்றான முக்கியமாகும். செல்வம் உருவாக்குபவர்கள்தான் இந்தியாவின் செல்வங்கள், நாம் அவர்களை மதிப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x