Published : 07 Aug 2019 12:24 PM
Last Updated : 07 Aug 2019 12:24 PM

4-வது முறையாக வட்டியைக் குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் வட்டி குறைய வாய்ப்பு

மும்பை

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 5.40 சதவீதமாக ரெப்போ விகிதம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தின் போதும் வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பதுதான் கேள்வியாக இருக்கும். இந்தியப் பொருளாதாரமும், தொழில்துறையும் சற்று சுணக்கமாக இருக்கும் சூழலில் அதிக அளவிலான முதலீடுகளை சந்தையில் வரச்செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமெனில் மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நுகர்வை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. சுணக்க நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கெனவே 3 முறை வட்டி விகிதத்தைக் குறைத்த ரிசர்வ் வங்கி, நான்காவது முறையும் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொழில்துறையினரிடையே இருந்து வந்தது.

இந்நிலையில் நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 5.40 சதவீதமாக ரெப்போ விகிதம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே ரிவரஸ் ரெப்போ விகிதம் 5.14 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x