Published : 12 Jul 2015 12:28 PM
Last Updated : 12 Jul 2015 12:28 PM

வணிக நூலகம்: ஏற்றம் தரும் மாற்றங்களால் பெருகும் மகிழ்ச்சி!

மாற்றம் ஒன்றே மாறாதது- என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மாற்றம் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம். அந்த மாற்றத்தினால் ஏற்படும் நிகழ்வுகளும் விளைவுகளும் மாறிக்கொண்டே அல்லவா இருக்கின்றன. நல்ல மாற்றங்களி னால் நல்ல விளைவுகளும், தீய மாற்றங்களி னால் தீய விளைவுகளும் ஏற்படுவது உண்மை தானே. நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் நமது அணுகுமுறையில் மாற்றத்தினை கொண்டுவந்து அதன் மூலம் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கிய மான வாழ்வினைப் பெறமுடியும் என்கிறார் “ஸ்மார்ட் சேஞ்ச்” என்னும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் “ஆர்ட் மார்க்மேன்”.

மாற்றம் கொஞ்சம் கடினமே!

நம்முடைய செயல்களில் மாற்றத்தினைக் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. கொஞ்சம் கடினம்தான், ஆனால் கண்டிப்பாக நம்மால் முடியும் என்கிறார் ஆசிரியர். ஆரோக்கியமான வாழ்விற்காக சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளாக நம்மால் நன்கு அறியப்பட்டவை: நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி, மன அழுத்தத்தினை குறைத்தல், புகைப்பழக்கம் மற்றும் மதுவினைத் தவிர்த்தல் போன்றவையே. இவற்றைப்பற்றிய விழிப்புணர்வும் காலம்காலமாக நமக்கு இருக்கவே செய்கின்றது அல்லவா!. இருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலேயே சிக்கல்கள் இருக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் உடற்பயிற்சிக் கூடங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். இந்த வருடம் எப்படியாவது நமது தோற்றத்தினை சீராக்க வேண்டும் என்று பலரும் எடுக்கும் புத்தாண்டு தீர்மானத்தின் விளைவே இந்த அதிகப்படியான எண்ணிக்கைக்கு காரணம். நல்ல விஷயம்தானே என்கிறீர்களா?. உண்மையில் இந்த மாற்றம் நல்ல விஷயம்தான். ஆனால் இது தொடர்கிறதா? என்றால், கண்டிப்பாக இல்லை என்பதே பதிலாக கிடைக்கும். பிப்ரவரி மாதத்திலிருந்து, உடற்பயிற்சி கூடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வழக்கமான உறுப்பினர்களை மட்டுமே பார்க்க முடிகின்றது. மாற்றத்தின் மீது இருக்கும் விழிப்புணர்வு, அந்த மாற்றத்தினை செயல் படுத்துவதில் இல்லை.

பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்!

எனக்கு அதற்கெல்லாம் ஏதுங்க நேரம்! என பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்த தயங்குவதில் நேரமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் தொடர்ச்சியான பழக்கத்தின் மூலமே ஒரு விஷயத்தை வழக்கத்திற்கு கொண்டுவரமுடியும். அதன்பின் அது நமக்கான அன்றாட செயல்பாடாக மாறிவிடுகின்றது.

உதாரணமாக, உங்கள் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு முதல்முறையாக செல்கிறீர்கள். கடையின் வடிவமைப்பு மற்றும் அங்குள்ள பொருட்களின் தரம் போன்ற அனைத்தும் உங்களுக்கு புதியவை. தேவையான பொருட்கள் எங்கு வைக்கப்பட் டுள்ளன மற்றும் அதன் மற்ற விபரங்கள் என அனைத்தையும் நீங்கள் தேடித் தெரிந்துகொள்ள உங்களுக்கு கணிசமான அளவில் நேர விரயம் ஆகத்தான் செய்யும். இரண்டாவது முறை அந்த கடைக்கு செல்கிறீர்கள், பொருட்களின் தரம் மற்றும் அவை வைக்கப்பட்டுள்ள இடம் போன்றவை உங்களுக்கு ஓரளவிற்கு பரிச்சயம். இந்த முறை உங்களின் நேரம் கணிசமான அளவிற்கு சேமிக்கப்படுகிறது. இதுவே தொடர்ந்து, நீங்கள் பத்தாவது முறையாக அந்த கடைக்குச் செல்லும்போது, பெரும்பாலான நேரம் மீதப்பட்டு, விரைவாக உங்கள் ஷாப்பிங் முடிகிறது. காரணம், உங்களுடைய புதிய பழக்கம் நாளடைவில் வழக்கமாக மாறி செயல்பாட்டிற்கு வந்துவிடுகின்றது.

ஆரோக்கியமான பணியாளர்கள்!

நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களின் ஆரோக்கியத்தில் தேவையான கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்கிறார் ஆர்ட் மார்க் மேன். ஆரோக்கிய குறைபாடுள்ள பணியாளர் களின் பணிபுரியும் திறன் குறைவாகவே இருக் கும். இதன்மூலம் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்பாடுகள் பாதிப்படையவே செய் கின்றது. ஆக நிறுவனப் பணியாளர்களின் ஆரோக் கியம் என்பது நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையதாகவே பார்க்கப்படுகின்றது.

2005 ஆம் ஆண்டு கிளீவ்லேண்ட் மருத்துவ மனை, தங்களது பணியாளர்களின் ஆரோக்கியத் திற்கான திட்டம் ஒன்றை செயல்படுத்துகின்றது. முதலில் நிறுவன வளாகத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அடுத்ததாக புகைப் பழக்கத்திற்கு உள்ளான பணியாளர்களுக்கு, அதன் விளைவுகளை பற்றிய விழிப்புணர்வினை உண்டாக்கும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப் பட்டன. பிறகு 2008 ஆம் ஆண்டு, யோகா வகுப்பு களும், உடற்பயிற்சி கூட உறுப்பினராவதற்கான ஏற்பாடுகளும் இலவசமாக வழங்கப்பட்டன. அதிகப்படியான சர்க்கரை உள்ள குளிர்பானங் களை பணியாளர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, 2010 ஆம் ஆண்டு நிறுவனத்தில் உள்ள வெண்டிங் மெஷின்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. அதேசமயம், அருகிலுள்ள விவசாயிகள் மூலமாக தரமான, இயற்கையான உணவுப்பொருட்கள் பணியாளர்களுக்கு கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

2012 ஆம் ஆண்டுவாக்கில் நிறுவனப் பணி யாளர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகின்றது. நன்மை தரும் மாற்றங்களைப்பற்றிய வெறும் அறிவு மட்டுமே போதுமானதல்ல. அதனை செயல்படுத்தும் வழி முறைகளும், திட்டங்களும் மிகவும் அவசியம். மனதில் வந்த மாற்றம், செயல்பாடாகவும் தொடரவேண்டும் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

இலக்கிற்கான ஆற்றல்!

நம்முடைய இலக்கு தெளிவானதாகவும், வலிமையானதாகவும் இருந்தால் மட்டுமே, அதை அடைவதற்கான மாற்றங்களையும், செயல்பாட்டு முறைகளையும் நமக்குள் கொண்டுவரமுடியும். அப்படி அந்த இலக்கினை வலிமைப்படுத்த நாம் செய்ய வேண்டியது என்ன?. மூன்று வழிகளில் நமது இலக்கிற்கு தேவையான ஆற்றலை நாம் அளிக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர் ஆர்ட் மார்க்மேன்.

முதலாவது, நம்முடைய எண்ணங்களை செம்மைப்படுத்த வேண்டும். மனதின் எண்ணங் களே நமது இலக்கிற்கான அடிப்படை தூண்டு கோலாக இருக்கின்றது. இலக்கிற்கு தேவை யான சக்தியினையும், இலக்கின் மீதான நம் பிக்கையினையும் அதிகப்படுத்த எண்ணங்களே பெரிதும் உதவுகின்றன. இரண்டாவது நம் முடைய சூழல். மாறுபட்ட பல சூழ்நிலைகளுக்கு நடுவே நமது இலக்கினை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். எந்தவொரு நிலையிலும் அந்த சூழல் நமது பயணத்தை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். நமது இலக்கிற்கு தகுந்த, அதேசமயம் இலக்கிற்கு துணைபுரியும் வகையிலான சூழ்நிலையினை ஏற்படுத்திக்கொள்வது சிறந்தது. மூன்றாவது, மற்றவர்களின் செயல்பாடுகள் நம்முடைய இலக்கிற்கான மிக முக்கியமான ஆற்றல். நம்மைச்சுற்றியுள்ளவர்களின் திறமை யான செயல்பாடுகள் நமக்கு பெரும் தூண்டு கோலாக அமைகின்றது. மேலும், நமது செயல் களுக்கான அவர்களது ஊக்கம் மற்றும் ஆதரவு போன்றவை நம்முடைய இலக்கை அடைவதற் கான ஆற்றலாகவே பார்க்கப்படுகின்றது.

கண்காணிப்பு தேவை!

வெற்றிக்கான ஒரு புதிய பழக்கத்தை உங்களின் செயல்பாடாக ஆக்கிக்கொண்டு, மாற்றத்திற்கான இலக்கினை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில், குறிப்பிட்ட இடைவெளியில் உங்களின் செயல் பாட்டின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு இருக்கவேண்டியது மிகவும் அவசியம். அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம், எதிர்வரும் தடைகள் மற்றும் தோல்விகள் போன்றவற்றை அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டும். இவையே நமது செயல்பாட்டினை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லவும், அதேசமயம் சூழ்நிலைகளுக்கேற்ப திட்டத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும்.

இந்த கண்காணிப்பெல்லாம் முழுக்க முழுக்க நமக்கும், நம்முடைய இலக்கிற்குமானது. இவை தவிர, நம்முடைய புதிய மாற்றங்கள் மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு மற்றவர்களை பாதிக்கின்றது என்பதையும், இந்த தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. நமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்கள் நம்முடைய புதிய செயல்பாட்டினால் பாதிப்படையும்போது, அது நமக்கும் நம்முடைய இலக்கை நோக்கிய பயணத்திற்கும் எந்தவிதத்திலும் இடையூறாக அமைந்துவிடாதபடி, அதில் தேவையான மாற்றங்களை செய்வது அவசியம்.

மாற்றத்திற்கான புதிய பழக்கத்தை ஏற்படுத் திக்கொள்வது கடினமானதாக இருந்தாலும், விடாமுயற்சியுடன் செய்யப்படும் செயல்பாடு களால் அவை நம் வசமாகின்றது. இதனுடன், சிறந்த இலக்கும், அதன் மீதான மதிப்பீடும் சேரும்போது வெற்றியும் நம் வசமாகின்றது.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x