Published : 30 Jul 2015 10:33 AM
Last Updated : 30 Jul 2015 10:33 AM

யெஸ் வங்கி, அலகாபாத் வங்கி, டாபர் மற்றும் ஜிசிபிஎல் காலாண்டு முடிவுகள்

யெஸ் வங்கியின் நிகரலாபம் 28% உயர்வு

தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிகரலாபம் 28 சதவீதம் உயர்ந்து 551 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் 431 கோடி ரூபாயாக இருந்தது.

வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 3,093 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 3,797 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 3.3 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 0.33 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 0.46 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல கடந்த ஜூன் காலாண்டில் 0.07 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 0.13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

அலகாபாத் வங்கியின் நிகரலாபம் ரூ.146 கோடி

.பொதுத்துறை வங்கியான அலகாபாத் வங்கியின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 30 சதவீதம் உயர்ந்து 146.86 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 112 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.

வாராக்கடன் நிலைமை மேம்பட்டிருப்பதால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. அதேபோல பணியாளார்களின் சம்பளத்துக்கு எந்த தொகையும் ஒதுக்கீடு செய்யவில்லை. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 5,518 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,396 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருடம் 5.48 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 5.29 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடனும் 3.88 சதவீதத்தில் இருந்து 3.67 சதவீதமாக சரிந்துள்ளது.

டாபர் நிகரலாபம் 24% உயர்வு

எப்எம்சிஜி நிறுவனமான டாபர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 24 சதவீதம் உயர்ந்து 261 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 210 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 1,868 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது ரூ.2,069 கோடியாக மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தில் புதுமைகளை புகுத்தி வருகிறோம். அதே சமயத்தில் எங்கள் பிராண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதால், சந்தை மதிப்பை தாண்டியும் வருங்காலத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கும் என்று டாபர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ சுனில் துகால் தெரிவித்தார்.

டாபர் இந்தியா நிறுவனத்தின் பங்கு நேற்றைய வர்த்தகத்தில் 1.31 சதவீதம் சரிந்து 290.60 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.

ஜிசிபிஎல் நிகரலாபம் ரூ. 199 கோடி

எப்எம்சிஜி நிறுவனமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 39 சதவீதம் உயர்ந்து 199 கோடி ரூபாயாக இருக்கிறது. அதிகளவிலான விற்பனையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலாண்டில் 143 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது. செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானம் 11 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 1888 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 2,097 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளின் விற்பனை 13 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x