Published : 23 Jun 2015 09:48 AM
Last Updated : 23 Jun 2015 09:48 AM

சென்செக்ஸ் 414 புள்ளிகள் உயர்வு: தொடர்ந்து 7-வது நாளாக பங்குச்சந்தைகள் ஏற்றம்

தொடர்ந்து ஏழாவது நாளாக இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தை சந்தித்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று இந்திய பங்குச் சந்தைகள் 1.5 சதவீதத்துக்குமேல் ஏற்றம் கண்டன.

முக்கியக் குறியீடான சென் செக்ஸ் 414 புள்ளிகள் ஏற்றத்தைக் கண்டு 27730 புள்ளிகளில் முடிந் துள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 128 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8353 புள்ளி களில் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் 1.4 சதவீதம் வரை உயர்ந்தன.

நேற்றைய வர்த்தகத்தில் வங்கித் துறை பங்குகள் 2.62 சதவீதம் வரை ஏற்றத்தைச் சந்தித்தன. வட்டிக் குறைப்பு நடவடிக்கைக்கு பிறகு வங்கித்துறை பங்குகள் நல்ல லாபம் கண்டு வருகின்றன. மேலும் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதும், பருவ மழை குறித்த எதிர்பார்ப்புகளும் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் லாபமாக வர்த்தகம் ஆனது.

நேற்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் துறை பங்குகளும் ஏற்றமாக வர்த்தகம் ஆனது. மும்பை பங்குச் சந்தையின் ரியாலிட்டி குறியீடு 5 சதவீதம் உயர்ந்தது. இன்டியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குகள் 30 சதவீத ஏற்றம் கண்டது.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் ரூ.538 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக நேற்று அதன் நிறுவனர் அறிவித்தார். இந்த துறையைச் சேர்ந்த ஹெஐடிஎல், டிஎல்எப், யுனிடெக் நிறுவனங்களும் சுமார் 7 சதவீதம் வரை லாபத்தைக் கண்டன.

நேற்றைய வர்த்தகத்தில் ரியாலிட்டி மற்றும் வங்கிப் பங்குகள் தவிர ஆட்டோமொபைல், டெக்னாலஜி, எப்எம்சிஜி துறை பங்குகளும் ஏற்றத்தை கண்டன. தென் மேற்கு பருவமழையின் தொடக்கம் எப்எம்சிஜி நிறுவனப் பங்குகளின் ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் 1.5 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

இன்போசிஸ் பங்குகள் நேற்று 2.86 சதவீதம் லாபத்தைக் கண்டது. இன்போசிஸ் சிஇஓ விஷால் சிக்கா நேற்று நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பேசியபோது வரும் காலங்களில், நிறுவனத்தின் இலக்கு 10 முதல் 12 சதவீத வளர்ச்சியை எட்டுவது என்று குறிப்பிட்டது இந்த பங்குகள் விலை ஏற்றத்துக்கு காரணமாக இருந்தது.

நிப்டியின் 50 முக்கியப் பங்குகளில் 43 பங்குகள் ஏற்றத்தைக் கண்டன. மீதமுள்ள 7 பங்குகள் இறக்கம் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் 1746 பங்குகள் ஏற்றத்தையும் 955 பங்குகள் இறக்கத்தையும் கண்டன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்றம் இருந்தது. முந்திய தின வர்த்தக முடிவில் 63.55 ரூபாயாக இருந்த மாற்று மதிப்பு நேற்றைய வர்த்தக முடிவில் 63.51 ரூபாயாக முடிந்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் சந்தை 1359 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்துக்கு பிறகு சந்தை கண்டுள்ள ஏற்றம் இது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 லட்சம் கோடி என்று பிஎஸ்இ கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x