Published : 01 Jun 2015 10:03 AM
Last Updated : 01 Jun 2015 10:03 AM

தூத்துக்குடி சுங்கத்துறை ரூ.2,113 கோடி வரி வசூல்

தூத்துக்குடி சுங்கத்துறை கடந்த நிதியாண்டில் (2014- 2015) மத்திய அரசின் இலக்கை தாண்டி ரூ. 2,113 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறை முகத்தில் சரக்கு போக்குவரத்து ஆண்டு தோறும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சுங்கத் துறையின் வரி வருமானமும் ஆண்டு தோறும் உயர்ந்து வருகிறது. நடந்த முடிந்த 2014- 2015-ம் நிதியாண்டில் தூத்துக்குடி சுங்கத்துறைக்கு வரி வசூல் இலக்காக ரூ. 2,095 கோடி மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த இலக்கை தாண்டி ரூ.2,113 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் வருமானத்தைவிட 18.12 சதவீதம் கூடுதலாகும் என்று தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் பி.வி. சுப்பா ராவ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இறக்கு மதியை பொறுத்த வரை தூத்துக்குடி துறைமுகம் வழியாக தாமிரத்தாது, நிலக்கரி, இயந்திர தளவாடங்கள், மரத் தடிகள், வினைல் குளோரைடு போன்றவை அதிக அளவில் இறக்குமதியாகியுள்ளன.

தூத்துக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சில அனல்மின் நிலையங்கள் மின் உற்பத்தியை தொடங்கியிருப்பதால் நிலக்கரி இறக்குமதி கணிசமாக உயர்ந்துள்ளது. அதுபோல ஆயத்த ஆடைகள், காப்பர் கேத்தோடு, பருத்தி நூல் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

சில குறிப்பிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது ஏற்றுமதி ஊக்கத் தொகை (drawback) மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 600 ஊக்கத் தொகை விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x