ஏற்றுமதி சரிவால் வேலையிழப்பு உருவாகும்: எப்ஐஇஓ

ஏற்றுமதி சரிவால் வேலையிழப்பு உருவாகும்: எப்ஐஇஓ
Updated on
1 min read

இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் வேலையிழப்பு ஏற்படும் என்று இந்திய ஏற்றுமதி சம்மேளனம் (எப்ஐஇஓ) எச்சரித்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

அடுத்து வரும் மாதங்களுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்துள்ளன. இதே நிலை தொடர்ந்தால் ஊழியர்களுக்கு ஊதியமில்லா ஓய்வு (லே ஆஃப்) அளிக்க வேண்டிய சூழல் நிறுவனங்களுக்கு ஏற்படும் என்று எப்ஐஇஓ தலைவர் எஸ்.சி. ரல்ஹான் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வந்தால் அதன் விளைவாக நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (சிஏடி) அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து சரிந்து வந்த ஏற்றுமதி மே மாதத்தில் 20.19 சதவீத அளவுக்குச் சரிந்துள்ளது. ஏற்றுமதி வருமானம் 2,234 கோடி டாலராக உள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவும் ஒரு காரணமாகும்.

இந்தப் பிரச்சினையை அரசு உடனடியாக தொழில்துறையினருடன் ஆலோசித்து தீர்க்க முயல வேண்டும். குறிப்பாக ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in