

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயர்ந்து முதல் முறையாக சீனாவை முந்தும் என உலக வங்கியின் வளர்ச்சி தர வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார எதிர்பார்ப்பு அட்டவணையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணரும் மற்றும் துணைத் தலைவருமான கவுஷிக் பாசு கூறும்போது, "2015-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற மிகப் பெரிய நாடுகளை முதல் முறையாக இந்தியா முந்துகிறது. இதன் மூலம் சீனாவின் வளர்ச்சி விகிதத்தை இந்தியா முந்த உள்ளது.
நடப்பு நிதியாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 7.1 ஆக இருக்கும் எனத் தெரிகிறது. மற்ற வளரும் நாடுகளின் வளர்ச்சி, இதே நிதியாண்டில் 4.4 சதவீதத்திலிருந்து அடுத்த நிதியாண்டில் 5.4 ஆக உயரலாம் என்று அதன் பொருளாதார நிலவரத்தின்படி கணிக்கப்படுகிறது" என்றார்.