Published : 21 May 2014 12:35 PM
Last Updated : 21 May 2014 12:35 PM

ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீடு: அசோசேம் வலியுறுத்தல்

ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று தொழில் சங்கங்களின் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கட்டுப்படியாகும் விலையில் வீடுகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

வீட்டு வசதித் துறைக்கு கட்டமைப்பு துறைக்கான அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அசோசேம், நில ஆவணங்களை கணினிமயமாக்க வேண்டும் என்றும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதிகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் தற்போது தேக்க நிலை நிலவுகிறது. இதனால் வசதி படைத்த தனிநபர்களின் (ஹெச்என்ஐ) முதலீடு குறைந்து வருகிறது. கடனுக்கான வட்டி அதிகமாக இருப்பதே இதற்குக் காரண மாகும். இதனால் வீடுகளின் விலை ஒரு சில மாநிலங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் கட்டுப்படியாகும் விலையில் வீடுகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முடியும். வீட்டு வசதித் துறையை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும். இதன் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இப்போது 1.80 கோடி வீடுகள் தேவைப்படுகின்றன. இத்தகைய வீடு தேவைப் படுவோரில் 95 சதவீத்தினர் பொருளாதார நிலையில் மிகவும் கீழ் நிலையில் உள்ளவர்கள், குறைந்த ஊதியம் ஈட்டும் பிரிவினர் மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினராவர்.

வீட்டு வசதிப் பிரிவுக்கு துறை ரீதியான அந்தஸ்து அளிக்கப்படுவதன் மூலம் இதில் முதலீடுகள் பெருகும். மேலும் இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும். இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள ஒரு கோடி டாலர் என்பதை 50 லட்சம் டாலராகக் குறைக்க வேண்டும், மேலும் வெளியேறும் காலம் 3 ஆண்டாக உள்ளதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என்றும் அசோசேம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வருமான வரிச் சட்டம் 43 சி பிரிவில் உள்ள விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதன்படி திட்டப் பணிகளை மேற்கொள்வது மற்றும் சிறிய திட்டப் பணிகளை மேற்கொள்வோருக்கும் வரிச் சலுகை கிடைக்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

வீட்டு வசதி துறையில் உள்ள கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட கபூர், கட்டுப்படியாகும் வீடுகளை வாங்குவோருக்காக விதிக்கப்பட்ட வருமான வரம்புகளையும் உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நீண்டகால அடிப்படையில் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு முறையை சீர்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வீட்டு வசதித் துறையில் ஒற்றைச் சாளர முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x