Published : 19 May 2015 10:15 AM
Last Updated : 19 May 2015 10:15 AM

பொசிஷனிங்: மாத்திரை, மரணம், மறுவாழ்வு!

மூன்று நாட்கள். ஏழு மரணங் கள். ``மில்லியன் டாலர்கள் தருகிறாயா? அல்லது கொலைகள் தொடரும்” என்னும் கொலைகாரனின் மிரட்டல். அவனை வலைவீசிப் பிடிக்கிறது போலீஸ். குற்றத்தை நிரூபிக்க முழுச் சாட்சி யங்கள் இல்லை. சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளை ஆதாரமாக வைத்து, மிரட்டியவனுக்கு நீதிமன்றம் 20 வருடச் சிறைத் தண்டனை தருகிறது.

கம்பி எண்ணுகிறான். நன்னடத்தையால் 15 வருடங்களில் வெளியே வருகிறான். அவன் கொலைகாரனே அல்ல, தங்கள் துப்பறியும் “திறமை”யை நிரூபிக்கப் போலீஸ் நடத்திய நாடகத்தில் ஒரு அப்பாவி பலிகடாவாக்கப்பட்டான் என்று தொடரும் சந்தேகங்கள்.

மர்மம், மர்மம், மர்மம்... இது ராஜேஷ் குமார் கதையில்லை. பொசி ஷனிங்கில் ஒரு அத்தியாயம்.

செப்டம்பர் 29, 1982. அமெரிக்க நாட்டு சிகாகோ நகரத்தின் எல்க் என்னும் புறநகர் பகுதி. 12 வயது மேரி கெல்லர்மான். அவளுக்கு ஜலதோஷம், தொண்டை வலி. அம்மாவிடம் சொன் னாள். அம்மா டைலனால் மாத்திரை கொடுத்தார். ``கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கொள். உடம்பு சரியாகிவிடும்.” என்றார்.

அமெரிக்காவில் டைலனால் மாத் திரை நம் ஊர் அனாசின், சாரிடான் மாதிரி. ஜலதோஷம், உடல் வலி, ஜூரம் எதுவானாலும் அமெரிக்கர்கள் கண்ணை மூடிக்கொண்டு சர்வரோக நிவாரணியாக டைலனாலை விழுங்கு வார்கள். மேரி, டைலனால் விழுங் கினாள். படுத்தாள். அரைமணி நேரம் பொறுத்து, மகள் என்ன செய்கிறாள் என்று அம்மா பார்க்க வந்தார். ஏனோ சந்தேகம். கூப்பிட்டார்.

மேரி கண் விழிக்கவில்லை. உலுப்பினார். எழுந் திருக்கவில்லை. பயம், பயம், இனம் புரியாத பயம். கணவனை அழைத்தார். அரைமணி நேரத்துக்கு முன்னால் சாதாரணமாகப் பேசிய பெண், எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஆரோக்கியமான மேரிக்கு என்ன ஆயிற்று? டாக்டரை கூப்பிட்டார்கள். வந்தார். “மேரி இறந்துவிட்டாள். உடலில் பரவியிருந்த விஷம் உயிரைக் குடித்துவிட்டது. ”

போலீஸ் வந்தது. மேரி உடலைப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். உடலில் பொட்டாசியம் சயனைட். இது கொடிய விஷம். நாக்கால் தொட் டாலே டிக்கெட்தான். அதனால், பொட் டாசியம் சயனைட் இனிக்குமா, கசக்குமா, புளிக்குமா என்பது இந்த வினாடிவரை உலகத்துக்குத் தெரி யாது.

இது கொலை அல்லது தற் கொலை. போலீஸ் அம்மா, அப்பா வைச் சந்தேகத்தோடு பார்த்தார்கள். குடும்பத்தில் ஏதாவது பிரச்சினையா என்று அவர்களிடமும், அக்கம் பக்கத் திலும் துருவித் துருவி விசாரித்தார்கள். அமாவாசை இரவில், இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடிய கதைதான். போலீஸுக்குப் பதில்களே கிடைக்கவில்லை.

அடுத்தடுத்த மரணம்

அதே நாள். சிகாகோ நகரின் ஆர்லிங்டன் ஹைட்ஸ் பகுதி. ஆடம் ஜானஸ் என்னும் 27 வயதுக்காரருக்கு மாரடைப்பு வந்தது. குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே வழக்கம்போல் டைலனால் கொடுத்தார்கள். மரணம். சேதி கேட்டு அதிர்ந்த 25 வயதுத் தம்பி ஸ்டான்லி, 19 வயது மனைவி தெரஸாவோடு பதறியோடி வந்தார். இருவருக்கும் தலைவலி மண்டையைப் பிளந்தது. டைலனால் சாப்பிட்டார்கள். இருவரும் உடனடி மரணம். மூவர் உடலிலும், பொட்டாசியம் சயனைட் விஷம்!

அடுத்த இரண்டு நாட்கள். சிகாகோ நகரத்தின் இன்னும் இரண்டு பகுதிகள். 35 வயது மேரி மக்ஃபார்லான்ட், 35 வயது பாலா பிரின்ஸ், 27 வயது மேரி வெய்னர் ஆகிய மூன்று பேர் மரணம்.

7 பேர் மரணம்

மூன்று நாட்கள். ஒரே ஊரில் ஏழு மரணங்கள். ஒரே காரணம் சாவுக்கு சற்று முன் அவர்கள் சாப்பிட்ட டைலனால் மாத்திரை, அதில் இருந்த பொட்டாசியம் சயனைட் விஷம். டைலனால் தயாரித்தவர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். நம் எல்லோருக்கும் தெரிந்த நிறுவனம்தான். நம் ஊரில் குழந்தை களுக்கு சோப், பவுடர் எல்லாம் தயாரிக்கிறார்களே, அந்த நிறுவனமே தான். பெரிய பெயர். வசதிக்காக, செல்லமாக ஜே அண்ட் ஜே என்று கூப்பிடுவார்கள். நாமும் அப்படியே அழைப்போம்.

நாடு முழுக்க அத்தனை வயதினரும், தினமும் சாப்பிடும் டைலனானில் சயனைட்! அமெரிக்காவே நடுங் கியது. போலீஸ் அதிவேகத்தில் விசாரணைகளை நடத்தியது. முதலில் ஜே அண்ட் ஜே தொழிற்சாலைகளில் சோதனை. இந்த மாதிரித் தவறுகள் நடக்கவே முடியாத கட்டுப்பாடுகள் அங்கே இருந்தன. ஜே அண்ட் ஜே இல்லையென்றால், இந்த விபரீத விளையாட்டை நடத்தியது யார்?

போலீஸ் சிகாகோ பகுதியில் டைலனால் விற்பனை செய்த அனைத்து மருந்துக் கடைகளையும் சோதனை யிட்டார்கள். அத்தனை டைலனால் பாட்டில்களையும் பறிமுதல் செய்தார்கள். இரண்டு பாட்டில்களில் சயனைட் கலந்த மாத்திரைகள் கிடைத் தன. அந்தக் கடைக்காரர்களை, அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களை கேள்விகளால் துளைத்தார்கள்.

ஆதாரம் கிடைக்கவில்லை

தடயங்கள் கிடைத்தன. ஒரு சதிகாரன் பல வாரங்களாக, பல சூப்பர் மார்க்கெட்டுகளை நோட்டமிட்டு டைலனால் பாட்டில்களைத் திறந்து மாத்திரைகளைத் திருடியிருக்கிறான். அவற்றில் சயனைட் தடவி, அந்த மாத்திரைகளை மறுபடி எடுத்த பாட்டில்களிலேயே கொண்டு போட்டு விட்டான் என்று காவல் துறையின் புலன் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால், அந்தக் கொலை காரன் யாரென்று தெளிவாக நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மிரட்டல் கடிதம்

இப்போது, ஜே அண்ட் ஜே கம்பெனிக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது - ‘‘மில்லியன் டாலர்கள் தருகி றாயா? அல்லது கொலைகள் தொடரும்.”

போலீஸ் கடிதத்தின் மூலத்தைக் கண்டுபிடித்தார்கள். ஜேம்ஸ் லூயி என்பவன்தான் கடிதத்தின் சூத்திர தாரி. நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப் பட்டான். அவன்தான் கொலைகள் செய்தான் என்பதற்கான நிரூபணங்கள் இல்லை. சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் 20 வருடச் சிறைத் தண்டனை பெற்றான்.

போட்டியாளர்கள் மீது சந்தேகம்

ஒரு மில்லியன் டாலருக்காக, ஜேம்ஸ் லூயி என்னும் தனி மனிதன் இந்தக் கொடூரத்தைச் செய்திருப்பான் என்பதைப் பலர் இன்றும் நம்ப வில்லை. அன்று, ஜே அண்ட் ஜே விற்பனையில் 35 சதவீதமும், லாபத்தில் 15 சதவீதமும் டைலனால் தந்தது. மக்களுக்கு ஜே அண்ட் ஜே டைலனால் மேல் இருந்த அதீத நம்பிக்கையைத் தகர்த்துவிட்டால், நிறுவனத்தை சாய்த்துவிடலாம் என்று போட்டியாளர்கள் தில்லாலங்கடி வேலை பண்ணியிருக்கலாம் என்று பலர் சந்தேகப்படுகிறார்கள். நியாய மான சந்தேகம்.

விற்பனை கடும் சரிவு

எதிரிகள் எதிர்பார்த்ததுபோல், ஜே அண்ட் ஜே -வின் டைலனால் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை அதல பாதாளத்தில் விழுந்தது. சாதார ணமாக, இத்தகைய சவால்களைச் சந்திக்கும் நிறுவனங்கள் கதிகலங்கிப் போவார்கள். என்ன செய்வதென்று திகைப்பார்கள். தாமதிக்கும் ஒவ் வொரு விநாடியும், அவர்கள் முடிவை விரைவாக்கும்.

தீர்வுக்கான அதிரடி முயற்சி

ஜே அண்ட் ஜே வித்தியாச மானவர்கள். சம்பவம் நடந்த உடனேயே, கொஞ்சம்கூட நேரத்தை இழக்காமல், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்கள். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்துத் தீர்வு காண்பதுவரை, டைலனால் தயாரிப்பையும், விற்பனை யையும் நிறுத்தினார்கள். நாங்கள் சொல்வதுவரை, டைலனால் சாப்பிடா தீர்கள் என வாடிக்கையாளர்களை விளம்பரங்கள் மூலம் எச்சரித்தார்கள்.

10 கோடி டாலர் மதிப்புள்ள டைலனால் (இன்றைய மதிப்பு சுமார் 420 கோடி ரூபாய்) சூப்பர் மார்க் கெட்டுகளிலும், கடைகளிலும் கையி ருப்புச் சரக்கு இருந்தது. அவை அத்தனையையும் அவர்களிட மிருந்து நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது. அவர்களுக்கு நஷ்ட ஈடு தந்தார்கள். வில்லனைக் கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு அறிவித்தார்கள்.

பாக்கேஜிங்கில் மாற்றம்

இரண்டு மாதங்களுக்குள் பாக் கேஜிங் மாற்றப்பட்டது. நவம்பர் மாதத்தில் புதிய பாக்கேஜிங்கில் வந்தது டைலனால். எங்காவது டைலனால் பிளாஸ்டிக் டப்பா கிடைத்தால் அதைத் திறக்கப் பாருங்கள். ஒரு வழியாகி விடுவீர்கள். சிவப்பு மூடி. வெள்ளை டப்பா. மூடியிலும் டப்பாவிலும் அம்புக் குறி அடையாளம் போடப்பட்டிருக்கும். அந்த இரண்டு அம்புக் குறிகளும் இணையும்போதுதான் டப்பா சொர்க்க வாசல் திறந்து நீங்கள் டைலனால் மாத்திரையை வெளியே எடுக்க முடியும். நமக்கே இப்படித் திணறும்போது, நேரம் எடுக்கும்போது, சதிகாரர்கள் பொது இடங்களில் டப்பாவைத் திறந்து, தகிடுதத்தங்கள் பண்ணுவது நடக்காத காரியம்.

ஓராண்டில் மீண்டும் விற்பனை

தன் டைலனால் சிம்மாசனத்தை ஒரு வருடத்துக்குள் ஜே அண்ட் ஜே திரும்பப் பிடித்தார்கள்.

மார்க்கெட்டிங் போட்டிகள் இன்று யுத்தங்களாகிவிட்டன. மிகுந்த சிரமத்தோடும், செல வோடும் உருவாக்கியிருக்கும் பொசிஷ னிங்கைச் சிதைக்க, போட்டியாளர்கள் கிரிமினல் வழிகளில் இறங்கினால் எப்படிச் சமாளிக்கவேண்டும்? சொல் லித் தருகிறது ஜே அண்ட் ஜேயின் டைலனால் அனுபவம்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x