Last Updated : 27 Apr, 2015 09:51 AM

 

Published : 27 Apr 2015 09:51 AM
Last Updated : 27 Apr 2015 09:51 AM

ஜியோமி நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு

சீன செல்போன் நிறுவனமான ஜியோமியில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா முதலீடு செய்து கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறார். சீன செல்போன் நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதல் இந்தியர் ரத்தன் டாடா ஆவார்.

எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ரத்தன் டாடா இணைய இருப்பது எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. அவரது ஆலோசனைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று ஜியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு ஜெயின் தெரிவித்தார்.

10,000 கோடி டாலர் மதிப்பிலான டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்துவருகிறார்.

ஸ்நாப்டீல், அர்பன்லேடர், புளூஸ்டோன், கார்டெகோ டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்களில் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் மொபைல் காமர்ஸ் நிறுவனமான பேடிஎம்-ல் முதலீடு செய்தார்.

சீனாவுக்கு அடுத்து எங்களுடைய மிகப்பெரிய மற்றும் முக்கியமான சந்தை இந்தியா ஆகும். அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் இந்திய செல்போன் விற்பனையில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம் என்று ஜியோமி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் பின் லின் தெரிவித்தார். மேலும் நாங்கள் இந்திய நிறுவனமாக இருக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் இந்தியாவில் எங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினை தொடங்கி இருக்கிறோம். இந்தியாவில் உற்பத்தி மற்றும் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யவும் உள்ளோம் என்று பின் லின் தெரிவித்தார்.

இந்தியாவின் மதிப்பு மிக்க பிஸினஸ் தலைவர் ரத்தன் டாடா. அவர் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, இதுவரை எங்களுடைய திட்டம் வெற்றி என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. இப்போதுதான் எங்களுடைய செயல்பாட்டினை தொடங்கி இருக்கிறோம். இன்னும் நிறைய சாதனங்களை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்துவோம் என்று ஜியோமி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x