Last Updated : 05 Apr, 2015 12:41 PM

 

Published : 05 Apr 2015 12:41 PM
Last Updated : 05 Apr 2015 12:41 PM

பெருமளவில் மின்சாரம் உபயோகிக்கும் நிறுவனங்கள் ஆன்லைனில் மின்சாரம் வாங்கலாம்!- நிபுணர் விஷால் பாண்டியா பேட்டி

கடந்தவாரம் clickpower.in என்ற இணையதளத்தைப் பார்த்தபோது வியப்பு கலந்த ஆச்சர்யம் மேலோங்கியது. ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதையும் மிஞ்சும் வகையில் மொபைல்போன் வர்த்தகம் மேலோங்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சமயத்தில் ஆன்லைனில் மின்சாரம் வாங்க முடியும் என்பதாக அந்த இணையதளம் தெரிவித்ததைப் பார்த்தபோது, சம்பந்தப்பட்ட நபர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. இணையதளம் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்பு கொண்டபோது தொழில் நிமித்தமாக சென்னை வந்திருந்த அதன் நிறுவனர்களில் ஒருவரான விஷால் பாண்டியாவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மும்பையைச் சேர்ந்த இவர் ஐஐடி மும்பையில் மின்சாரத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சில காலம் லார்சன் டூப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர். லின்க்டின் இணையதளம் மூலம் நண்பரான விபவ், இந்த எண்ணத்துக்கு உறுதுணையாக இருக்கவே பிறந்ததுதான் ஆர்இ கனெக்ட் எனர்ஜி நிறுவனம். 2009-ம் ஆண்டில் இருவரின் கூட்டு முயற்சியால் உருவானது.

இத்தகைய நிறுவனம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது எப்படி?

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதோடு அது பொருள் உற்பத்தியாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். தொழில் துறைக்கு பிரதானமான தேவை மின்சாரம்தான். எனது படிப்பும் அத்துறை சார்ந்திருந்ததால் அதில் உள்ள பல்வேறு வாய்ப்புகள், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இந்நிறுவனத்தை உருவாக்கினோம்.

நண்பர் விபவ் அடிப்படையில் சார்டர்ட் அக்கவுண்டன்ட். கொலம் பியா வர்த்தகக் கல்வி மையத்தில் அவர் பயின்ற நிர்வாகவியல் உயர் கல்வி நிதி சார்ந்த விஷயங்களில் உறுதுணையாக இருந்தது.

மின்சாரம் என்றவுடன் பெரிய நிறுவனங்களைக் குறிவைக்கா மல், சிறிய நிறுவனங்களை ஒருங் கிணைக்க முடிவு செய்தது ஏன்?

மின்னுற்பத்தியில் மரபு சாரா எரிசக்தித் துறை வளர்ந்து வரும் துறை என்பதை அறிந்தோம். இதில்தான் குறைந்த அளவு மின்னுற்பத்தி செய்யும் உற்பத்தி யாளர்கள் நாடு முழுவதும் இருப்பதை அறிந்து அவர் களை ஒருங்கிணைக்க முயற்சித் தோம்.

மேலும் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத மின்சாரத்தை அளிப்பதில் அவர்களுக்குள்ள பொறுப் புணர்வுக்கு நாங்களும் எங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க முடிவு செய்தோம்.

இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை எந்தெந்த நிறுவனங் களுக்கு தேவை உள்ளது என்பதை அறிந்து அவர்களுக்கு மின் விநியோகம் செய்வதற்கான வசதியை செய்து கொடுத்தோம்.

மின்சாரத்தை விற்கும் நிறுவனத் துக்கும் வாங்கும் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தங்களை ஏற் படுத்தி அதை உரிய வகையில் செயல்படுத்துவதற்கான வழி முறைகள், விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தும் பணி யைச் செய்தோம்.

புதிதாக மரபு சாரா எரிசக்தி மின்னுற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களும் உங்களை அணுகு கிறார்களா?

புதிய நிறுவனங்களுக்கு தேவை யான தொழில்நுட்ப ஆலோசனை, அதற்காகும் செலவு, செயல்திட்டம், பொருள்களை எங்கு வாங்குவது என்பன உள்ளிட்ட அனைத்து ஆலோசனைகளையும் அளிக்கிறோம். ஒரு கிகா வாட்ஸ் முதல் 2 கிகா வாட்ஸ் வரையிலான மின் கொள்முதல் செய்வோர் வாடிக்கை யாளர்களாக உள்ளனர்.

உற்பத்தி செய்வோருக்கும் வாங்குவோருக்கும் பாலமாக விளங்குகிறோம். இணையதளம் மூலமான வர்த்தகம் என்பதால் அனைத்து நடவடிக்கைகளுமே வெளிப்படையானதாக இருக் கிறது. இதனால் நம்பகத்தன்மை அதிகரித்து மேலும் பல உற்பத்தி யாளர்கள் எங்கள் மூலமாக மின்சாரத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.

பொதுவாக மின் விநியோகத் தில், விநியோக இழப்பு (Trans mission Losses) இருக்கும் அதை எவ்விதம் சமாளிக்கிறீர்கள்?

மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தப்படும்போது விநியோக இழப்பை இருதரப்பும் ஏற்கும். இதற்குத் தகுந்த வகையில் ஒப்பந்தம் போடப்படும். ஆனால் பொதுவாக விநியோக நிறுவனங்கள் பெருமளவு விநியோகத்தின்போது இழப்பை சந்திக்கவில்லை.

எத்தனை நிறுவனங்கள் உங்கள் மூலம் விநியோகம் செய்கின்றனர்? அனல் மின் நிறுவனங்களை உங்கள் கூட்டமைப்பில் இணைக்கும் உத்தேசம் உள்ளதா?

ஆர்இ கனெக்ட் என்றாலே மரபு சாரா எரிசக்தி நிறுவனங்களை ஒன்றிணைப்பதுதான். இப்போதைக்கு நாடு முழுவது 150 க்கும் மேற்பட்ட மரபு சாரா மின்னுற்பத்தி நிறுவனங்கள் எங்கள் மூலம் மின்சாரத்தை விற்பனை செய்கின்றனர். இருப்பினும் அதிக அளவிலான மின் தேவை இருப்பதால் மிகப் பெரிய அனல் மின் நிலையங்களுடனும் பேச்சு நடத்தி வருகிறோம். இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2008-ல் தொடங்கிய உங்கள் நிறுவனத்துக்கு முதலீடு எங்கிருந்து கிடைத்தது? இப்போது லாபம் ஈட்டத் தொடங்கி விட்டதா?

நிறுவனம் தொடங்கிய 15-வது மாதத்தி்ல் லாபம் ஈட்டத் தொடங்கி விட்டது. ஐஐஎம் ஆமதாபாத், எம்என்இ, ஐஎப்சி, பிரிட்டிஷ் பெட் ரோலியம் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

ஆன்லைன் மூலம் மின்சாரத்தை வாங்குவது என்ற யோசனை உருவானது எப்படி? அதற்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது?

ஐந்து மாதங்களுக்கு முன்புதான் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டது. இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது.

இதை எப்படி செயல்படுத்த முடியும்? இத்தகைய மின் விநியோகத்துக்கு தனி கேபிள் போட வேண்டுமா?

தேவையில்லை. ஏற்கெனவே உள்ள கேபிள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்பவர் விற்கலாம். தேவைப்படுபவர் அதை வாங்கலாம். இதற்கான கட்டமைப்புக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டால் போதுமானது.

இத்தகைய முறை அனைத்து மாநிலங்களிலும் சாத்தியமா? ஒவ்வொரு மாநிலத்திலும் மின் கொள்கை, கொள்முதல் கொள்கை வேறுபடுகிறதே?

தற்போது பெரும்பாலான மாநிலங்களில் திறந்த நிலைக் கொள்கை பின்பற்றப்படு கிறது. இதனால் எந்த உற்பத்தியாளரிட மிருந்தும், தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம். நாடு முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. அதிக அளவில் மின்சாரம் உபயோகிப்போருக்கு இந்த விதி பொருந்தும். வீடுகளுக்கு இது நடைமுறை சாத்தியமாக சில வருடங்களாகலாம்.

இதுபோன்ற ஆன்லைன் முறைக்கான அவசியம் என்ன?

முன்பெல்லாம் உற்பத்தி யாளர்கள் மாநில மின்வாரியத்திடம் தான் விற்க வேண்டும். தேவைப் படுவோர் மாநில மின் வாரியத்திட மிருந்துதான் பெற வேண்டும். அந்த நிலை மாறிவிட்டது.

கடந்த ஆண்டு நாட்டின் மொத்த மின் உற்பத்தி 900 பில்லியன் யூனிட்டாகும். இதில் 53 சதவீதம் தொழிற்சாலை மற்றும் அதிக மின் உபயோகிப்பாளர்களாவர். இந்த கணக்கீட்டின்படி தொழில் துறையின் தேவை 450 பில்லியன் யூனிட்டாகும். இதில் 20 சதவீத சந்தையை ஓபன் ஆக்ஸஸ் எனப்படும் திறந்த நிலை கொள்முதல் மூலம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்குத் தான் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

பெருமளவில் மின்சாரம் உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு மின்சார தேவை இருந்து கொண்டே இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும்போது குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெற இத்தகைய இணையதளம் மூலமான வழி சிறந்த தீர்வாக இருக்கும்

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x