

பிரதமர் நரேந்திர மோடி இன்று முத்ரா வங்கியைத் தொடங்கி வைக்கிறார். சிறிய தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சம் வரையில் கடன் கொடுக்க வசதியாக முத்ரா வங்கி ஏற்படுத்தப்படும் என்று நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
தொடக்கத்தில் சிட்பி வங்கி யின் துணை அமைப்பாக இந்த முத்ரா வங்கி தொடங்கப் படுகிறது.
இதன் முதலாவது கிளை யை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வங்கிக்கான வழிகாட்டு முறைகளும் அதாவது எத்தகை யோருக்கு கடன் கிடைக்கும் என்பதற்கான கொள்கை விளக்கமும் வெளியிடப் படுகிறது. நாட்டில் மொத்தம் 5.77 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படாமல் நியாயமான வட்டி கிடைக்க வகை செய்வதற்காக முத்ரா வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறு, குறு தொழில்கள் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாகத் திகழ்வதால் எளிதில் கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
முத்ரா வங்கிக்கு முதலீடாக ரூ. 20 ஆயிரம் கோடி நிதியும், கடன் வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடியும் ஒதுக்கப் படுவதாக பட்ஜெட்டில் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
கடன் உதவித் திட்டங்களுக்கு சிஷு, கிஷோர், தருண் என பெயரிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் திட்டங்கள் சிஷு எனப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்டு ரூ. 5 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் கிஷோர் எனப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் தருண் எனப்படும்.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இந்த கடன் உதவித் திட்டங்கள் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலூன், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் பயன் பெறலாம். மகளிர் தொழில் முனைவோரும் இத்திட்டம் மூலம் கடன் பெறலாம்.