Last Updated : 17 Apr, 2015 09:27 AM

 

Published : 17 Apr 2015 09:27 AM
Last Updated : 17 Apr 2015 09:27 AM

இந்தியாவில் செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகள் அதிகரிப்பு: உலக வங்கி எச்சரிக்கை

இந்தியாவில் வங்கிக் கணக்குகள் தொடங்குவது அதிகரித்துள்ளது. 35 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் செயல்படாத வங்கிக் கணக்குக ளின் அளவும் அதிகரித்துள்ளது என்று உலக வங்கி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 17 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு `பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா’ திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை செல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2015 ஜனவரி இறுதியில் 12.5 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 2013 ல் எடுத்த ஒரு ஆய்வின்படி இந்தியாவில் 40 கோடி மக்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் கீழ் 97 சதவீத வங்கிக் கணக்குகள் பொதுத்துறை வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 72 சதவீத வங்கிக் கணக்குகள் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளாகும். மேலும் உலக வங்கி அறிக்கையில் இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்குகளில் சுமார் 43 சதவீத கணக்குகள் செயல்படுத்தப்படாத கணக்குகள் என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது 19.5 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் உலக அளவில் இளைய வயதினர்கள் 46 கோடி பேர் செயல்படாத கணக்குகளை வைத்துள்ளனர் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

உயர் வருமான கொண்ட ஓயிசிடி பொருளாதார நாடுகளில் இந்த விகிதம் 5 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களில் 39 சதவீத நபர்களிடம் மட்டுமே டெபிட் கார்டு ஏடிஎம் கார்டு உள்ளது. பலர் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கி செல்லும் நடைமுறையை வைத்துள்ளனர். இந்தியாவில் 21 சதவீத இளைய தலைமுறையினர் வங்கிசேவை இல்லாமல் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இது தெற்காசிய அளவில் மூன்று ஒரு பங்கு அளவாகும். சீனாவில் 12 சதவீதமும், இந்தோனேசியாவில் இது 6 சதவீதமாகவும் உள்ளது.

இந்த அறிக்கை 2011-ம் ஆண்டிலிருந்து 2014 வரை ஆய்வு செய்துள்ளது. உலக அளவில் 70 கோடி மக்கள் இந்த ஆண்டுகளில் வங்கி கணக்கு மற்றும் நிதியியல் நடவடிக்கைகளுக்குள் வந்துள்ளனர். மேலும் இது போன்ற நடவடிக்கைகள் வேலை வாய்ப்பு உருவாக்கம், கல்வி சார்ந்த முதலீடு மற்றும் ஏழை மக்கள் தங்களது பொருளாதார ரிஸ்கை சரிசெய்யவும் நேரடியாக உதவி செய்கிறது என இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x