Last Updated : 02 Apr, 2015 10:36 AM

 

Published : 02 Apr 2015 10:36 AM
Last Updated : 02 Apr 2015 10:36 AM

உருக்கு உற்பத்தியில் சீனாவை இந்தியா முந்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

உருக்கு உற்பத்தியில் சீனாவை விட அதிக அளவில் இந்தியா உற்பத்தி செய்ய வேண்டும். ஏற்கெனவே உருக்கு உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சிவிட்டது இந்தியா. இப்போது சீனாவை முந்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்க்கேலா செயில் உருக்கு ஆலையின் விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசுகையில் மோடி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

``மேக் இன் இந்தியா’’ திட்டம் பற்றி பேசுகையில் எந்தத் துறை யிலும் நாம் எந்த நாட்டுக்குப் பிறகு இருப்பதையும் ஏற்க முடியாது என்று குறிப்பிட்டார். உருக்கு உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார்.

ரூ. 12 ஆயிரம் கோடி முத லீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவாக்க பணி காரணமாக உற் பத்தி 45 லட்சம் டன்னாக அதிகரித் துள்ளது. முன்பு இந்த ஆலை 20 லட்சம் டன் உற்பத்தி செய்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவின் இளைஞர்கள் சக்தி அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம்பேர் இளைஞர்கள்தான். அடுத்த 10 வருடங்களில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பை உரிய வகையில் மேற்கொண்டால் நாடு வளம்பெறும் என்றார்.

இந்திய கனிம வளங்கள் நாட்டின் மேம்பாட்டுக்கும் தொழில்துறை வளர்ச்சிக்கும் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், நமது கனிம வளங்களை அடுத்த நாடுகளுக்கு வர்த்தகம் செய்வதன் மூலம் பொருளாதார வளரும் ஆனால் நான் இதை விரும்பவில்லை என்றார். மேலும் இதை வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்றார்.

வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மற்றெந்த நாடுகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று உறுதியாகக் கூறினார்.

நாட்டின் பல பகுதிகளும் சீரான வளர்ச்சி காண வேண்டுமென்று விரும்புகிறேன். மேற்கு பகுதியில் வளம் பெறும் அதே வேளையில், கிழக்கு பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். கனிம வளத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் ஒடிசா மாநிலத்துக்கான ராயல்டியை ரூ.25,000 கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் ஒடிசா மாநிலம் வளர்ச்சி பாதையில் உள்ளது என்று மோடி குறிப்பிட்டார்.

நிலக்கரி வளம் உள்ள ஒடிசா, சத்தீஸ்கர், பிஹார் மாநிலங்கள் கனிம ஏலங்களின் மூலம் பயனடைகின்றன என்றார். மேலும் வெளிப்படையான ஏலம் மூலம் நாடு ரூ. 2 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x