Last Updated : 13 Mar, 2015 08:53 AM

 

Published : 13 Mar 2015 08:53 AM
Last Updated : 13 Mar 2015 08:53 AM

நாடாளுமன்றத்தில் காப்பீட்டு மசோதா நிறைவேறியது

காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த காப்பீட்டு மசோதா மக்களவையில் மார்ச் 6-ம் தேதி நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. திரிணமூல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மசோதா மீது கம்யூனிஸ்ட் கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

திரிணமூல் காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் காப்பீட்டு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

காங்கிரஸ், அதிமுக, தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா, அகாலி தளம் ஆகியவை மசோதாவை ஆதரித்தன.

இது பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ள மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காப்பீட்டுத் துறையில் பல கோடி ரூபாய் அந்நிய முதலீடு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x