Last Updated : 31 Mar, 2015 10:18 AM

 

Published : 31 Mar 2015 10:18 AM
Last Updated : 31 Mar 2015 10:18 AM

கருப்புப் பண விவகாரம்: இந்திய வாடிக்கையாளர்களிடம் உத்திரவாதம் கேட்கிறது ஸ்விஸ் வங்கி

தங்கள் வங்கிகளில் வைத்துள்ள பணம், வரி ஏய்ப்பு செய்து போடப்பட்டதல்ல என்ற உத்திரவாதத்தை அளிக்குமாறு இந்திய வாடிக்கையாளர்களிடம் ஸ்விஸ் வங்கி கோரியுள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், மூத்த அதிகாரிகள் வைத்துள்ள வரி ஏய்ப்பு செய்த தொகையை வெளிக்கொண்டு வருவதில் அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக தொடர்ந்து ஸ்விஸ் அரசுக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தங்கள் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள தொகைக்கு முறையான வரி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவை வரி ஏய்ப்பு செய்வதற்காக போடப்பட்டதல்ல என்றும் புதிய உத்திரவாதத்தை அளிக்கும்படி கோரியுள்ளது ஸ்விஸ் வங்கி.

கணக்கில் வராத தொகையை பாதுகாப்பாக வைப்பதற்கு சரியான இடமாக ஸ்விஸ் வங்கிகள் கருதப்பட்டன. ஆனால் இனிமேலும் இந்த நிலை நீடிக்காது என்றே தோன்றுகிறது.

ஸ்விஸ் வங்கிகளில் பணம் போட வருபவரிடம் தணிக்கையாளரின் (ஆடிட்டர்) சான்று அளிக்கும்படி கோரப்படுகிறது. இதன் மூலம் தங்கள் வங்கிகளில் கணக்கில் காட்டப்பட்ட பணம்தான் போடப்படுகிறது என்ற நிலையை உருவாக்க வங்கிகள் முயன்று வருகின்றன.

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டுள்ள கணக்கில் காட்டாத கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஸ்விஸ் அரசு ஒப்புதல் அளிக்க முன்வந்துள்ளது.

இதன் வெளிப்பாடாக ஸ்விஸ் வங்கிகளில் பணம் வைத்துள்ள இந்திய முதலீட்டாளர்கள் முறைப்படி வரி செலுத்திய பிறகு சேமித்து வைக்கப்பட்ட தொகைதான் என்பதற்கான உறுதி மொழியை, உத்தரவாதத்தை அளிக்குமாறு கோரியுள்ளது.

பெரிய நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் ஆடிட்டரின் சான்றிதழை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் வருமானம் தொடர்பான விவரங்களை அளிக்குமாறும் ஸ்விஸ் வங்கிகள் கோரியுள்ளன.

அதிக முதலீடு செய்யும் தனி நபர்கள், சொத்துகளை நிர்வகிக்கும் பெரிய நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இத்தகைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஹெச்எஸ்பிசி, கிரெடிட் சூயிஸ் உள்ளிட்ட வங்கிகளுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஹெச்எஸ்பிசி வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை ஏற்கெனவே இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன், இந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றிய விவரத்தை தெரிவிக்காததற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் கோரும் நோட்டீஸை இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஹெச்எஸ்பிசி வங்கிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெச்எஸ்பிசி வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

ஹெச்எஸ்பிசி வங்கி பட்டியலில் 628 பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் வரி பகிர்வு ஒப்பந்த அடிப்படையில் தகவல்களை அளிக்க ஸ்விஸ் அரசு முன் வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x