Published : 06 Feb 2015 11:17 AM
Last Updated : 06 Feb 2015 11:17 AM

இந்திய நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா 25% முதலீடு

சீனாவின் அலிபாபா நிறுவனம் இந்திய இ-காமர்ஸ் துறையில் முதலீடு செய்கிறது. இதன் மூலம் இந்தியாவில் முதலீடு செய்யும் முதல் சீன நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை தனது குழும நிறுவனம் மூலம் அலிபாபா வாங்குகிறது. பேடிஎம் நிறுவனத்தை நடத்துவதும் இந்த ஒன் 97 நிறுவனம்தான்.

ஆன்ட் பைனான்ஸியல் சர்வீசஸ் என்னும் துணை நிறுவனம் மூலம் அலிபாபா நிறுவனம் முதலீடு செய்கிறது.

இந்த 25 சதவீத பங்குகள் எவ்வளவு தொகைக்கு விற்கப் பட்டன என்ற அதிகாரபூர்வ தகவல் இதுவரை இல்லை. ஆனாலும் 25 சதவீத பங்குகள் 50 கோடி டாலருக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அப்படியானால் ஒன் 97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 200 கோடி டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து தன்னுடைய தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த போவதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அலிபாபா நிறுவனமும் இந்த நிறுவனத்துக்கு தேவை யான தொழில்நுட்ப உதவி களை செய்யப்போவதாக தெரிவித் திருக்கிறது.

இந்தியாவில் 100 கோடிக்கும் மேலான இந்த சேவையை (ஆன்லைன் பேமெண்ட்) பயன் படுத்தாமல் இருப்பதாக ஆன்ட் பைனாஸியல் நிறுவனத்தின் துணைத்தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ’மொபைல் வாலட்’ பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்றார்.

அலிபாபா நிறுவனத்துடன் இணைந்தது மகிழ்ச்சியான தருணம். இருவரும் இணைந்து இந்த துறையின் வளர்ச்சியை மாற்றுவோம் என்று ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா தெரிவித்தார்.

இந்த இணைப்புக்கு சிட்டி குரூப் மற்றும் கோல் மேன் சாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிதி ஆலோசகர்களாக செயல் பட்டார்கள். இது தவிர கே.பி.எம்.ஜி நிறுவனமும் ஆலோசகராக இருந்தது.

ஒன் 97 கம்யூனிகேஷன் பேடிஎம் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவ னத்தில் மார்கியூ (marquee), எஸ்.ஏ.ஐ.எப். பார்ட்னர்ஸ், சாமா கேபிடல் சாப்ஹயர் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா இந்தியா வந்திருந்தார். அப்போது இந்தியாவில் டெக்னாலஜி நிறுவனங்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் தனது துணை நிறுவனத்தை அமெரிக்க பங்குச்சந்தையில் அலிபாபா நிறுவனம் பட்டியல் செய்தது. அதன் மூலம் 2,500 கோடி டாலர் தொகையை அலிபாபா திரட்டியது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x