Published : 11 Feb 2015 11:21 AM
Last Updated : 11 Feb 2015 11:21 AM
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச பேஸ்புக் சேவையை அளிக்க உள்ளது.
இதற்காக பேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்கள், இணையதளங்கள், பொதுவான தகவல்களை தேடும் இணைய தளங்களையும் இலவசமாகக் அளிக்க உள்ளது. இதற்கென்று ரிலையன்ஸ் நிறுவனம் இண்டெர்நெட் டாட் ஓஆர்ஜி என்கிற புதிய இணையதள ஆப்ஸ் கொண்டு வந்துள்ளது.
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதில் ஆசிய அளவில் இந்தியா முதல் நாடாக இருக்கும். என்று ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆப்ஸ் ரிலையன்ஸ் மொபைல் நெட்வொர்க் பயன் பாட்டாளர்களுக்கு பயன்படும்.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் இந்தியாவை இணைக்க இன்னும் நீண்ட வழிகள் உள்ளன என்றும், மக்களின் அடிப்படை இணையதள சேவைகளை பெறுவதில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் உலகின் அதிக மக்களைச் சென்றடையும் பெரிய மொபைல் நெட்வொர்க் சந்தையில் இதன் மூலம் பேஸ்புக் இணைகிறது என்றும் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டெர்நெட் வாடிக்கையாளர்களுக்கு செய்தி, தகவல்கள், வேலைவாய்ப்பு சார்ந்த 33 இணைய தளங்கள் இலவசமாக அளிக்க உள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவில் 70 சதவீத மக்களுக்கு இணையதள சேவை கிடைக்கவில்லை.
இந்த சேவையின் மூலம் பேஸ்புக் மற்றும் இணையதளங்கள் இலவசமாக அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் நுகர்வோர் தொழில்கள் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி குருதீப் சிங்.
இந்த இலவச சேவையில் பேஸ்புக் தவிர ஓஎல்எக்ஸ், டைம்ஸ்ஜாப்ஸ்,கிளியர் டிரிப், ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ உள்ளிட்ட இணையதளங்கள் கிடைக்கும். முதற்கட்டமாக மும்பை, மஹாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம், சென்னை, தமிழ்நாடு மற்றும் கேரளா மண்டலங்களில் அளிக்க உள்ளது. அடுத்த 90 நாட்களுக்குள் இதை செயல்படுத்த இலக்கு வைத்துள்ளதாக சிங் குறிப்பிட்டார்.
பேஸ்புக் நிறுவனர் அனுப்பி யுள்ள வீடியோ செய்திக் குறிப்பில் இதன் மூலம் மேலும் பத்து லட்சம் மக்களுக்கு இணைய வசதி சென்று சேரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT