Published : 03 Feb 2015 11:32 AM
Last Updated : 03 Feb 2015 11:32 AM
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இரு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இதில் வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். எனினும், எஸ்.எல்.ஆர் விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்படும் என்றார்.
இதன்படி ரெபோ விகிதம் (ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி) 7.75 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) எந்த விதமான மாற்றமும் செய்யப்படாமல் 4 சதவீதம் என்ற நிலையிலும் தொடரும் என்றார் ரகுராம் ராஜன்.
முன்னதாக, பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் உள்ள நிலையில் கடனுக்கான வட்டியை கால் சதவீதம் (0.25) ரிசர்வ் வங்கி குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
உற்பத்தித் துறையில் தொடர்ந்து நிலவி வரும் தேக்க நிலையைப் போக்க ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதைய நிலை தொடர்வதையே ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் விரும்புவதாக சில அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.
அத்தகவல்களுக்கு ஏற்ப, வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT