Published : 01 Jan 2015 12:10 PM
Last Updated : 01 Jan 2015 12:10 PM
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஜனவரி 31 வரை 300-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. அரசாங்கம் எந்த உதவியும் செய்ய முடியாது என்றும், நிறுவனம் தங்களுடைய பிரச்சினையை தாங்களே சரி செய்துகொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துவிட்டது. மேலும் நிலுவையில் இருக்கும் ரூ.200 கோடி பாக்கியை செலுத்த வேண்டும் என்று விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.) கூறியுள்ளது.
முன்னதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது நிதி பிரச்சினைகளை சமாளிக்க 15 நாள் கால அவகாசம் கொடுத்திருந்தது மத்திய அரசு. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாநில விமான இயக்ககங்களுக்கு டிசம்பர் 31 வரை ஸ்பைஸ்ஜெட் வைத்துள்ள நிலுவைகளை வசூலிக்க வேண்டாம் என குறிப்பிட்டிருந்தது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எண்ணெய் நிறுவன நிலுவையை மட்டும் வழங்கியது. ஆனால் மாநில விமான இயக்ககங்களுக்கு டிசம்பர் 31வரையில் ரூ.200 கோடி வங்கி பிணையம் மட்டுமே வழங்கியது. அதனால் இப்போது பணம் கொடுத்து இயக்குமாறு விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.
செப்டம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 310 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ. 560 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 35 விமானங்களை இயக்கி வந்தது. தற்போது 18 ஆக குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT